Monday 2 September 2013






பௌத்தமும் தமிழும்
மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980)










முதல் பதிப்பு 1940      - ஐந்தாம் பதிப்பு 1972    
 © Books of this author are nationalized according to this TN Government notice  (search for word Mylai)  with the intention of making them available to all.
Article in English published by Buddhist Publication Society, Kandy (Wheel Publication #124/125) broadly based on this book can be read here  Buddhism in South India  

1. கௌதமபுத்தர் வாழ்க்கை வரலாறு

உலகத்திலே அறம் குன்றி மறம் வளர்ந்து மக்கள் அல்லலுறுங் காலங்களிலெல்லாம் புத்தர்கள் தோன்றி அறவழியைப் புகட்டி மக்களை நல்வழிப்படுத்துகிறார்கள் என்பதும், பற்பல கற்பகாலங்களில் கணக்கற்ற புத்தர்கள் தோன்றி அறநெறியை நாட்டிச் சென்றார்கள் என்பதும், இப்போது நடைபெறுகிற இந்தக் கற்பகாலத்திலே இருபத்தைந்து புத்தர்கள் தோன்றினார்கள் என்பதும் அவர்களுள் கடைசியாக வந்தவர் கௌதமபுத்தர் என்பதும் பௌத்தசமயக் கொள்கைகள். இனி வரப்போகிற புத்தரது பெயர் மயித்ரேய புத்தர் என்பதும், அவர் இப்போது துடிதலோகம் என்னும் தெய்வலோகத்திலே நாததேவர் என்னும் பெயருடன் இருக்கிறார் என்பதும் அந்த மதக் கொள்கைகளாம்.

  பல புத்தர்கள் இருந்தார்கள் என்று பௌத்த சமய நூல்கள் கூறினாலும் சரித்திர நூலோர், கௌதமபுத்தரை மட்டும் சரித்திரகாலப் புத்தர் என்று கொள்கிறார்கள். கௌதமபுத்தருடைய வரலாறு தனி நூல்களாக எழுதப்பட்டுள்ளன வாகையினாலே, ஈண்டு அவரது வரலாற்றை மிகச் சுருக்கமாகக் கூறுகிறோம்.

  சாக்கிய குலத்திலே கௌதம குடும்பத்தைச் சேர்ந்த சுத்தோதனர் என்னும் அரசர் கபிலவத்து என்னும் ஊரை அரசாண்டு வந்தார். கபிலவத்து இமயமலை அடிவாரத்திலே இப்போதைய நேபாள நாட்டில் இருந்தது. சுத்தோதன அரசருக்கும் அவர் மனைவியராகிய மாயாதேவிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. கி.மு. ஆறாம் நூற்றாண்டிலே, அஃதாவது ஏறக்குறைய கி.மு 563இல் இந்தக் குழந்தை பிறந்ததாகச் சரித்திர நூலோர் கூறுவர். இக் குழவிக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டினார்கள். இக் குழந்தைதான் பிற்காலத்திலே புத்தர் பெருமானாக விளங்கியது.

  சித்தார்த்தர் பெரியவனானால் துறவியாய் விடுவார் என்று நிமித்திகர் கூறியதைக் கேட்டு, அரசன் மனம் வருந்தி, அக்குழந்தைக்குத் துறவு பூணும் எண்ணம் தோன்றாமலிருக்கும் பொருட்டு அதனைச் செல்வத்திலும் சுகபோகங்களிலும் திளைத்துவரச் செய்தார். உலக வாழ்க்கையில் வெறுப்புத் தோன்றாதபடி இன்ப சுகங்களைக் கொடுத்துவந்தார். குழந்தை வளர்ந்து பதினாறு வயதுள்ள குமாரனானபோது அவருக்கு விருப்பமுள்ள ஓர் அரசிளங்குமரியை மணம் செய்து வைத்தார். சித்தார்த்த குமாரனுடைய இருபத்தொன்பதாவது ஆண்டிலே அவருக்கு இராகுலன் என்னும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த அன்றைக்கே, சித்தார்த்தர் துறவு கொள்வதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

  வயது முதிர்ந்த "தொண்டு" கிழவர், கடும்பிணியினால் வருந்தும் நோயாளிகள், இறந்துபட்ட உடலாகிய பிணம் முதலிய துன்பக் காட்சிகளைச் சித்தார்த்தர் காண்பதற்கு வாய்ப்பில்லாதபடி அவரின் தந்தையார் ஏற்பாடு செய்திருந்தும், இக் காட்சிகளை யெல்லாம் அவர் காணும்படி நேரிட்டது. மிகவும் வயது முதிர்ந்த தள்ளாத கிழவர் ஒருவரை அவர் கண்டார். பிறகு, கொடிய நோயினால் வருந்தி வாய்விட்டலறிய ஒரு நோயாளியையும், உயிர் நீங்கிப் பிணமாகக் கிடந்த ஒரு மனித உடலினையும் அவர் காண நேரிட்டது. பின்னர், துறவி ஒருவரைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டது. துறவற வாழ்க்கை கவலையற்ற இன்ப வாழ்க்கை என்று அவர் கண்டார். மேலே கூறிய காட்சிகளை எல்லாம் காணப் பெற்ற சித்தார்த்தருக்கு, மனித வாழ்க்கை துன்பத்தில் சூழப்பட்டது என்றும், துன்ப வாழ்க்கையிலிருந்து நீங்கி நிலைத்த இன்பநெறியைக் கண்டு பிடித்து உலகத்தாரை உய்விக்க வேண்டும் என்றும் பேரவா உண்டாயிற்று. ஆகவே, அவர், அன்று நள்ளிரவிலே தம் ஒரே மகனையும், மனைவியையும், தாய் தந்தையரையும், இன்ப சுகங்களையும், அரச உரிமையையும், செல்வங்களையும், சுக போகங்களையும் துறந்து காட்டிற்குச் சென்றார்.

  முதலில் ஆளார காலாமர் என்பவர் இடத்திலும், பிறகு, உத்தக ராமபுத்திரர் என்பவர் இடத்திலும் சீடராக அமர்ந்து அவர்கள் காட்டிய வழியில் ஒழுகினார். விரைவிலே, அவர்கள் காட்டிய நெறி மக்களை உய்விக்கும் நெறியன்றென்று கண்டு, அவர்களை விட்டு உருவேல் என்னும் இடத்திற் சென்று, உண்ணாவிரதம் பூண்டு கடுந்தபசு செய்தார். அப்போது ஐந்து துறவிகள் இவரையடுத்து இவருடன் இருந்தார்கள். உணவு கொள்ளாமல் உடலை வாட்டி ஒடுக்கிக் கடுந்தபசு செய்தமையினாலே, குருதியும் தசையும் வற்றி எலும்பும் நரம்பும் தெரியும்படி உடல் நலிந்து வலிவு இல்லாமல் மயங்கி விழுந்தார். அதன்பிறகு, அளவுக்கு மிஞ்சி உடம்பைப் பட்டினியால் வாட்டுவது தவறு என்றும், அது மெய்ஞானம் பெற வழியன்றென்றும் கண்டு அன்று முதல் சிறிதளவு உணவு கொள்ளத் துணிந்தார். இதனைக்கண்ட இவருடன் இருந்த பிக்குகள் இவரைவிட்டுப் போய்விட்டார்கள். கடைசியாகப் போதி (அரச) மரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருந்த போது மெய்ஞ்ஞான ஒளியைக் காணப் பெற்றார். மெய்ஞ்ஞான ஒளியைக் கண்ட சித்தார்த்தர் புத்தர் ஆனார். ஞானமாகிய போதி கைவரப்பெற்று, பிறவித் துன்பத்தைக் கடந்து பிறவாமையாகிய இன்பநெறியைக் கண்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.

  பிறகு, புத்தர் தம்மை விட்டுச் சென்ற ஐந்து பிக்குகளைத் தேடிச்சென்று அவர்களுக்குத் தாம் கண்ட உண்மைகளைப் போதித்தார். அவர்கள் இவர்தம் உபதேசங்களைக் கேட்டு இவருக்குச் சீடர் ஆனார்கள். பிறகு, பல துறவிகள் இவருக்குச் சீடர் ஆயினர். அறுபதுபேர் சீடரானவுடன் அவர்களை ஊரெங்கும் அனுப்பித் தமது பௌத்தமதத்தைப் போதிக்கச் செய்தார். தாமும் பல இடங்களுக்குச் சென்று போதித்தார். இவரது புதிய உபதேசத்தைக் கேட்டு, வேறு மதத் துறவிகளும் கூட்டங் கூட்டமாகப் பௌத்தமதத்தில் சேர்ந்தார்கள். துறவிகள் மட்டும் அன்று; இல்லறத்தாராகிய அரசர்களும், நிலக்கிழார்களும், வணிகரும், செல்வந்தரும், பாமரமக்களும் பௌத்தமதத்தை மேற்கொண்டார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் நாடெங்கும் சுற்றித் திரிந்து புத்தர் தமது கொள்கையைப் போதித்தார்.

  துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுக வேண்டிய முறைகளை வகுத்தார். பிக்கு சங்கத்தை ஏற்படுத்தினார்.

  அரசர்களும், பிரபுக்களும் பிக்குகள் தங்குவதற்கு விகாரைகளையும் பள்ளிகளையும் அமைத்துக் கொடுத்து நிலபுலங்களைத் தானம் வழங்கினார்கள்.

  இவரது முதுமைக் காலத்தில் இவருக்கு மாறாகச் சிலர் கிளம்பி இவர் உண்டாக்கிய பௌத்த மதத்தில் பிளவு உண்டாக்க முயன்றனர். ஆனால், இவர் பிளவு ஏற்படாதபடி செய்தார்.

  புத்தர் பெருமான் தமது எண்பதாவது ஆண்டில் கி.மு 483 இல் ருசி நகரத்தில் நிர்வாண மோட்சம் அடைந்தார். ருசி நகரத்தார் இவர் உடலுக்கு இறுதிக் கடமைகளைச் செய்தார்கள். கொளுத்தப்பட்டு எஞ்சிய உடம்பின் சாம்பலும் எலும்பும் எட்டுப் பகுதியாகப் பகுக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு அவற்றின்மேல் சைத்தியாலயங்கள் கட்டப் பட்டன.

  புத்தருக்கு ஆயிரக்கனக்கான சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சாரிபுத்திரர், மொக்கலானார் (மௌத்தல்யானர்), மகாகாசிபர், உபாலி, ஆநந்தர், அனுருத்தர், காத்யானார் முதலானவர். மகத நாட்டரசர் பிம்பசாரரும், கோசல நாட்டரசர் பசேனதி (பிரசேனஜித்) என்பவரும் இவருடைய சீடர்களாயிருந்து இவரது மதம் பரவுவதற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள்.
  புத்தர்பெருமான் உயிர் வாழ்ந்திருந்த காலத்திலே பல மதங்கள் இருந்தன. சைன மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மாகாவீரர் (நிகந்தநாதபுத்த) என்பவர் இவர் காலத்தில் இருந்த சைனமதத் தலைவர். மகாவீரர், வயதினால் புத்தருக்கு மூத்தவர். சைனமதத் துறவிகள் உடலை வாட்டி ஒடுக்கி உண்ணாவிரதமிருந்து கடுநோன்பு நோற்று வந்தனர். கோசாலி மக்கலி என்பவர் உண்டாக்கிய ஆசீவகமதமும் புத்தர்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தது. ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலி (மக்கலி) யும் புத்தர்காலத்திலே உயிர் வாழ்ந்திருந்தவர். (ஆசீவகமதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) ஆசீவகமதத் துறவிகளும், நிகண்ட (சைன) மதத் துறவிகளும் உடையின்றி அம்மணமாகத் திரிந்தார்கள். அக்காலத்தில் இருந்த இன்னொரு முக்கியமான மதம் பிராமண மதம் எனப்படும் வைதீக மதமாகும். பிராமணர்கள் ஆடு மாடு குதிரை முதலிய மிருகங்களைக் கொன்று கொலை வேள்வி செய்து வந்ததோடு சாதிப்பிரிவையும் வளர்த்து வந்தார்கள். இன்னும் சில மதங்கள் அக்காலத்தில் இருந்தனவாயினும், குறிப்பிடத்தக்கவை சைனம், ஆசீவகம், வைதீகம் என்னும் மூன்று மதங்களாம். இந்த மூன்று மதங்களும் பௌத்தமதத்தோடு ஆதிமுதல் போரிட்டுக் கொண்டிருந்தன.

2. திரிபிடக வரலாறு

பௌத்த வேதத்திற்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலி மொழியிலே இது திபிடகம் என்று கூறப்படும். திரிபிடகம் என்பதற்கு மூன்று கூடை என்பது பொருள். அதாவது மூன்று வகுப்பு என்பது பொருள். பிடகத்தைப் பிடக்கு என்று தேவாரம்  கூறுகிறது. வட இந்தியாவிலே அக்காலத்தில் பெரும்பான்மையோர் வழங்கிவந்த அர்த்தமாகதி எனப்படும் பாலிமொழியிலே புத்தர் பெருமான் தம் கருத்துக்களை வெளியிட்டார். நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் புத்தர் பெருமான் தம் கொள்கைகளை நாடெங்கும் போதித்து வந்த போதிலும், அவர் அக்கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்கவில்லை. ஆனால், அவருடைய சீடர்கள், அவருடைய போதனைகளை இரண்டு சம்ஹிதை (தொகுப்பு) களாகத் தொகுத்துப் பாராயணம் செய்துவந்தனர். அத் தொகுப்புகளில், பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களைக் கூறுகிற விநயம் என்பது ஒன்று; தர்மம் (அறநெறி) என்பது மற்றொன்று.

   புத்தர் பெருமான் நிர்வாணமோட்சம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர், மகதநாட்டுத் தலைநகரமான ராஜ கிருஹ நகரத்திற்கு அண்மையில் இருந்த சத்தபணி என்னும் மலைக் குகையிலே கார்காலத்தைக் கழிக்கும் பொருட்டு ஐந்நூறு தேரர்கள் (வயது முதிர்ந்த பிக்குகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பிக்கு சங்கத்தார் கூடிய முதல் மாநாடு ஆகும். புத்தருடைய முக்கிய சீடர்களில் ஒருவராகிய மகாகாசிபர் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். புத்தர்பெருமான் அருளிய விநய போதனைகளை அவருடைய மற்றொரு முக்கிய சீடராகிய உபாலி என்பவர் ஓதினார். இன்னொரு முக்கிய சீடராகிய  ஆநந்தர், புத்தர் அருளிய தம்ம போதனைகளை ஓதினார். இவ்வாறு இந்த முதல் சங்கத்திலே விநயபிடகம், தம்ம(அபிதம்ம) பிடகம் என்னும் இரண்டு பிடகங்கள் மட்டும் தொகுக்கப்பட்டன. (சூத்திர பிடகம் என்னும் மூன்றாவது பிடகம், அபிதம்ம பிடகத்திலிருந்து பிற்காலத்தில் பிரித்துத் தொகுக்கப் பட்டது.) இவ்வாறு ஆதியில் இரண்டு பிடகங்களாக இருந்தவை பிற்காலத்திலே, மூன்று பிடகங்களாகத் தொகுக்கப்பட்டன. ஆகவே, முதலில் கூறியபடி இவற்றிற்குத் திரிபிடகம் என்று பெயர் உண்டாயிற்று.

  திரிபிடகம் தொகுக்கப்பட்ட பிறகும், அவை எழுதா மறையாகவே இருந்தன. பிடகங்களைப் பிக்குகள் நாள்தோறும் ஓதி, பாராயணம் செய்து வந்ததோடு அவற்றைத் தன் சீடர்களான பிக்குகளுக்கும் கற்பித்து ஓதுவித்து வந்தனர். இவ்வாறு, புத்தருடைய அருள் வாக்குகள், எழுதப்படாமல் எழுதாமறையாக இருந்து, ஆசிரிய மாணவர் வழிமுறையாக நெடுங்காலம் ஓதப்பட்டன.

   விநயபிடகத்தை ஓதிய பிக்குகள் விநயதரர் என்றும், சூத்திரபிடகத்தை ஓதிவந்தவர் சூத்ராந்திகர் என்றும், அபிதம்மபிடகத்தை ஓதிவந்தவர் அபிதம்மிகர் என்றும் பெயர் வழங்கப் பட்டனர் .   இவ்வாறு திரிபிடகங்களைப் பாராயணம் செய்துவந்த பிக்குகளுக்குப் பாணகர் என்பது பெயர். தீக பாணகர், மஜ்ஜிம பாணகர், சம்யுத்த பாணகர், அங்குத்தர பாணகர், ஜாதக பாணகர், தம்மபதப் பாணகர் முதலிய பெயர்களைப் பௌத்த மத உரை நூல்களில் காணலாம்.1

 1. (திரிபிடக நூலைப் பாராயணம் செய்த பௌத்த பிக்குகளாகிய இந்தப் பாணகரையும் தமிழ்நாட்டிலே பண்டைக் காலத்தில் யாழ் வாசித்து இசை பயின்ற பாணர் என்பவர்களையும் பெயர் ஒற்றுமைகொண்டு இருவரும் ஒருவரே என மயங்கக் கூடாது.)

   அன்றியும், இப்பிடகங்களை ஓதிய பிக்குகளில் பல உட்பிரிவினரும் இருந்தனர். அவ்வுட் பிரிவினர், பிடகங்களின்  உட்பிரிவுகளை மட்டும் ஓதிவந்தனர். உதாரணமாகக் கூறுவாம்; புத்தருடைய  சீடர்களில் ஒருவராகிய ஆநந்தரைத் தலைவராகக் கொண்ட பிக்குகள், சூத்திரபிடகத்தின் ஒரு பிரிவாகிய தீகநிகாயப் பகுதியை ஓதிப் பாராயணம் செய்துவந்தனர். மற்றொரு சீடராகிய சாரிபுத்தரைத் தலைவராகக் கொண்ட பிக்குகள் மஜ்ஜிம நிகாயப் பகுதியை ஓதிவந்தனர். மகாகாசிபரைத்  தலைவராகக் கொண்ட பிக்குகள்  சம்யுத்த நிகாயப் பகுதியையும், அநுருத்தரைத்  தலைவராகக் கொண்ட பிக்குகள் அங்குத்தர நிகாயப் பகுதியையும் பாராயணம் செய்து வந்தார்கள்.

  பௌத்த மதத்தில், பிற்காலத்திலே பிளவுகள் ஏற்பட்டுப் பிரிவுகள் உண்டாயின. புத்தர் வீடுபேறடைந்து நூற்றுப் பத்தாண்டுகளுக்குப் பின்னர்,  பிக்கு சங்கத்தில் புதிதாகத் தோன்றிய சில பழக்கவழக்கங்களைக் கண்டிக்கும்பொருட்டு, வைசாலி நகரத்தில் 700 பிக்குகள் மாநாடு கூடி எட்டுத் திங்கள்வரை ஆராய்ந்து, புதிய வழக்கங்களைக் கூடாதென்று தடுத்தார்கள். கண்டிக்கப்பட்ட 10,000 பிக்குகள் ஒருங்கு சேர்ந்து தனிப் பிரிவாகப் பிரிந்து போயினர் என்று தீபவம்சம் என்னும் நூல் கூறுகிறது. புத்தருடைய பழைய கொள்கைகளைப் பின்பற்றிவரும் பௌத்த மதத்துக்குத் தேரவாத பௌத்தம் என்றும், (இதற்கு ஹீனயானம் என்று தவறாகப் பெயர் வழங்குகிறது) புத்தர்காலத்தில் இல்லாத புதிய கொள்கைகளைக் கொண்ட பௌத்த மதத்திற்கு மகாயான பௌத்தம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன. அவ்விரு பெரும்பிரிவுகளிலும் அநேக உட்பிரிவுகள் உண்டு.

   இலங்கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நாளாவது வரையில், பழைய தேரவாத பௌத்தம் நிலைபெற்றுள்ளது. இத்தீவிலேயும் கி.மு முதல் நூற்றாண்டிலே புதிய  கொள்கைகள் பௌத்தமதத்தில் புகத் தொடங்கின. ஆகவே, தேரவாத பௌத்த பிக்குகள் ஒருங்குகூடி, ஆதிக்கொள்கைக்குப் புறம்பான புதிய கொள்கைகள் திரிபிடகத்தில் நுழையாதபடி போற்றவேண்டும் என்னும் கருத்தோடு, அதுவரையும் எழுதாமறையாக இருந்த திரிபிடகத்தை நூல் வடிவமாக எழுதினார்கள். இலங்கைத் தீவை கி.மு 29 முதல் 17 வரையில் அரசாண்ட வட்ட காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில் திரிபிடகம் முதல்முதல் நூல் வடிவமாக எழுதப்பட்டது என்று மகா வம்சம் என்னும் நூல் (xxxiii 100-101) கூறுகிறது. இலங்கைத் தீவிலுள்ள மலைய நாட்டிலே, மாத்தளை என்னும் ஊருக்கருகிலிருந்த ஆலோக (அலு) விகாரை என்னும், பௌத்தப் பள்ளியிலே திரிபிடகம் பொற்றகட்டில் எழுதப்பட்டு அவ்விகாரையில் ஒரு கற்பாறையின் கீழ்ச் சேமித்து வைக்கப் பட்டதென்று கூறப்படுகிறது.

  திரிபிடகம் , நூல்வடிவாக எழுதப்பட்ட பிறகும், நெடுநாள் வரையில் வாய்மொழியாக ஓதும் பழக்கம் வழக்காற்றில் இருந்து வந்தது. பின்னர் அவ்வழக்கம் கைவிடப்பட்டது.

  பிடகம் என்றால் கூடை என்று பொருள். எனவே, திரிபிடகம் என்றால், மூன்று கூடை என்று பொருள்படும்:  அதாவது மூன்று தொகுப்பு என்பது கருத்து. பிடகத்தை பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது. திரிபிடகம்  பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. தொன்று தொட்டுப் புத்தரைப் பின்பற்றி வருகிற தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. (பிற்காலத்தில் உண்டான மகாயான பௌத்த நூல்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை.) பிடகங்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு:

I.விநய பிடகம்: இரண்டு பிரிவுகளையுடையது.
அவை: 1. விநயபிடகம், 2. பாதிமோக்கம் என்பன.

II. சூத்திர பிடகம்: ஐந்து பிரிவுகளையுடையது.
அவை: 1. தீக நிகாய, 2. மஜ்ஜிம  நிகாய,  3. சம்யுத்த  நிகாய, 4. அங்குத்தர  நிகாய, 5. குட்டக  நிகாய என்பன.

 ஐந்தாவது பிரிவாகிய குட்டக  நிகாயம் பதினைந்து உட்பிரிவுகளையுடையது. அவ்வுட் பிரிவுகளாவன:

1.குட்டக பாதம், 2. தம்ம பதம், 3. உதானம், 4. இதிவுத் தகம், 5. ஸத்தநி பாதம், 6. விமான வத்து 7. பேதவத்து, 8. தேரகாதை, 9. தேரிகாதை, 10. ஜாதகம், 11. (மகா) நித்தேசம், 12. படிசம்ஹித மக்கா, 13. அபதானம், 14. புத்த வம்சம்,15. சரியா பிடகம் என்பன.

 III. அபிதம்ம பிடகம்: ஏழு பிரிவுகளையுடையது. அவை: 1. தம்மசங்கணீ , 2. விபங்கம்,  3. கதாவத்து, 4. பஞ்ஞத்தி அல்லது பண்ணத்தி  (புக்கல பஞ்ஞத்தி), 5. தாதுகதை, 6. யமகம், 7. பட்டானம் என்பன.

 திரிபிடக நூல்களுக்குப் பிற்காலத்திலே உரையாசிரியர்கள் பாலிமொழியிலே உரைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகள் நாலதுவரையில் தேரவாத பௌத்தர்களால் பயிலப்பட்டு வருகின்றன. அவ்வுரைகளாவன:-

பிடக நூலின் பெயர்                உரைநூலின் பெயரும், உரையாசிரியர் பெயரும்

I.விநய பிடகம்
1. விநயபிடகம்                     ஆசாரிய புத்தகோஷர், சமந்தபாசாதிக என்னும் உரையை எழுதினார்
2. பாதிமோக்கம்                    ஆசாரிய புத்தகோஷர், கங்கா விதரணீ  என்னும் உரையை எழுதினார்

II. சூத்திர பிடகம்
1. தீக நிகாய                       ஆசாரிய புத்தகோஷர், ஸூமங்கள விலாஸினீ  என்னும் உரையை எழுதினார்  
2. மஜ்ஜிம  நிகாய                  ஆசாரிய புத்தகோஷர், பபஞ்சஸூடனீ  என்னும் உரையை எழுதினார்
3. சம்யுத்த  நிகாய                 ஆசாரிய புத்தகோஷர், ஸாரத்த பகாஸினீ  என்னும் உரையை எழுதினார்
4. அங்குத்தர  நிகாய               ஆசாரிய புத்தகோஷர், மனோரதபூரணீ  என்னும் உரையை எழுதினார்

5. குட்டக  நிகாய
 1.குட்டக பாதம்                    ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்
2. தம்ம பதம்                       ஆசாரிய புத்தகோஷர், தம்மபதாட்டகதா என்னும் உரையை எழுதினார்
3. உதானம்                         ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
4. இதிவுத் தகம்                     ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
5. ஸத்தநி பாதம்                    ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்
6. விமான வத்து                     ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
7. பேதவத்து                         ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
8. தேரகாதை                        ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
9. தேரிகாதை                        ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
10. ஜாதகம்                          ஆசாரிய புத்தகோஷர், ஜாதகாத்தகதா  என்னும் உரையை எழுதினார்
11. (மகா) நித்தேசம்                  உபசேனர், ஸத்தம பஜ்ஜோதிகா  என்னும் உரையை எழுதினார்
12. படிசம்ஹித மக்கா            மகாநாமர், ஸத்தம பகாஸினீ   என்னும் உரையை எழுதினார்
13. அபதானம்                        விஸூத்தஜன  விலாஸினீ  என்னும் உரை நூலின் உரையாசிரியர் பெயர் தெரியவில்லை
14. புத்த வம்சம்                     ஆசாரிய புத்ததத் தேரர்  மதுராத் விலாஸினீ  என்னும் உரையை எழுதினார். 
                                                     (இவர் சோழ நாட்டுத் தமிழர்)
15. சரியா பிடகம்                     ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
III. அபிதம்ம பிடகம் 

1. தம்மசங்கணீ                     ஆசாரிய புத்தகோஷர், அத்தஸாலினீ என்னும் உரையை எழுதினார்
2. விபங்கம்                              ஆசாரிய புத்தகோஷர், ஸம்மோஹ வினோதனீ  என்னும் உரையை எழுதினார்
3. கதாவத்து                             ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா  என்னும் உரையை எழுதினார்
4. புக்கல பஞ்ஞத்தி                ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்
5. தாதுகதை                             ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்
6. யமகம்                                      ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்
7. பட்டானம்                             ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்

   இதுகாறும் கூறப்பட்டவை பழைய பௌத்தமாகிய தேரவாத பௌத்த நூல்கள். இவையன்றி, இன்னும் சில நூல்கள் தேரவாத பௌத்தத்தில் உள்ளன. விரிவஞ்சி அவற்றை இங்குக் கூறாமல் விடுகிறோம். தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டவை. பழைய தேரவாத பௌத்தத்தை ஈனயானம் என்றும் கூறுவர்.

   தேரவாத பௌத்தத்திலிருந்து, பிற்காலத்தில் பிரிவுண்டது மகாயான பௌத்தம். மகாயான பௌத்தர்கள், திரிபிடகத்தில் உள்ள சில பகுதிகளைத் தள்ளியும், கௌதம புத்தர் கூறாத வேறு சில கருத்துக்களைப் புகுத்தியும் தமது  மதநூல்களை அமைத்துக் கொண்டனர்.  மகாயான பௌத்தர்கள் தம் மதநூல்களை வடமொழியில் எழுதிவைத்தனர். அந்நூல்களின் பெயர்களை,  விரிவஞ்சி ஈண்டுக் குறிக்காமல் விடுகிறோம்.

   தமிழிலே, சிவஞான சித்தியார் (பரபக்கம்), நீலகேசி (2 முதல் 5 ஆவது சருக்கம் வரையில்) என்னும் நூல்களில் பௌத்த மதத்தத்துவங்கள் கூறப்பட்டு மறுக்கப்படுகின்றன. இவை முறையே சைவ, சைன மதத்தவரால் எழுதப்பட்டவை. மணிமேகலை 30  ஆவது காதையிலே தேரவாத பௌத்த தத்துவங்கள் விரிவாகக் கூறப்படுகின்றன. மணிமேகலையைத் தவிர, ஏனைய குண்டலகேசி முதலிய பௌத்தத் தமிழ் நூல்கள் இறந்துவிட்டன.

3. பௌத்தமதத் தத்துவம்

"பேதமை செய்கை உணர்வே அருவுர
வாயில் ஊறே நுகர்வே வேட்க
பற்றே பவமே தோற்றம் வினைப்பயன
இற்றென வகுத்த இயல்பீ ராறும
பிறந்தோர் அறியில் பெரும்பேறு அறிகுவர
அறியார் ஆயின் ஆழ்நர கறிகுவர்."
(மணிமேகலை 24-ஆம் காதை 105-110, 30-ஆம் காதை 45-50)

    பௌத்தமதத் தத்துவம் பன்னிரண்டு நிதானங்களையுடையது. (நிதானம் = காரணம்). பன்னிரண்டு நிதானங்களைத் தமிழில் பன்னிரு சார்பு என்பர்.
அவையாவன:
1. அவிஜ்ஜை, 2. ஸங்க்காரம், 3. விஞ்ஞானம், 4. நாமரூபம், 5. ஸளாயதனா, 6. பஸ்ஸ, 7. வேதனா, 8. தண்ஹா, 9. உபாதானம், 10. பவம், 11. ஜாதி, 12. ஜராமரணம்.

    பாலிமொழிப் பெயர்களாகிய இவற்றைச் சீத்தலைச் சாத்தனார் தமது மணிமேகலை என்னும் நூலிலே கீழ்க்கண்டவார்று தமிழ்ப் பெயரால் கூறுகிறார்:-
1. பேதமை, 2. செய்கை, 3. உணர்வு, 4. அருவுரு, 5. வாயில், 6. ஊறு, 7. நுகர்வு, 8. வேட்கை, 9. பற்று, 10. பவம், 11. தோற்றம், 12. வினைப்பயன்.

    இப்பன்னிரு சார்புகளின் தன்மைகளைச் சாத்தனார் மணிமேகலை 30 ஆம் காதையில் விளக்கியுள்ளார். இச்சார்புகளினாலே பிறப்பு இறப்பு உண்டாகின்றன. சார்புகளை அறுத்தால், பிறப்பு இறப்பு நீங்கி நிர்வாண மோட்சம் எனப்படும் வீடு பேற்றினை அடையலாம். இவற்றைப் பாலி மொழியில் உள்ள பிடக நூல்களில் கூறியுள்ளபடியே சாத்தனார் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார். விநயபிடகத்தின் மகாவக்கம் என்னும் பிரிவில் முதல் காண்டத்தில் கீழ்க்கண்டபடி கூறப்பட்டுள்ளது:

"அவிஜ்ஜா பச்சயா ஸங்க்காரா
ஸங்க்கார பச்சயா விஞ்ஞானம்
விஞ்ஞான பச்சயா நாமரூபம்
நாமரூப பச்சயா ஸளாயதனம்
ஸளாயதன பச்சயா பஸ்ஸ
பஸ்ஸ பச்சயா வேதனா *
வேதனா பச்சயா தண்ஹா
தண்ஹா பச்சயா உபாதானம்
உபாதான பச்சயா பவ
பவ பச்சயா ஜாதி
ஜாதி பச்சயா ஜராமரணம்
ஸோக பரிதேவ துக்க தோமஸ்ஸு பாயாஸா ஸம்பவந்தி"
                                * புத்தகத்தில் வேதனா விடப்பட்டுள்ளது.

    இத் திரிபிடக வாக்கியத்தைச் சொல்லுக்குச் சொல் மொழி பெயர்த்து, சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:

"பேதைமை சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா ஊறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம் அரற்றுக் கவலை கையாறெனத்
தவலில் துன்பந் தலைவரும் என்ப. "
(மணிமேகலை 30-ஆம் காதை 103-116)

    இவ்வாறு துன்பத்திற்கு (பிறப்பிற்கு)க் காரணமான பன்னிரண்டு சார்புகளையும் கூறியபின்னர், பிறவாமையாகிய இன்பத்திற்குக் காரணத்தை விநயபிடகம், மகாவக்கம், முதற்காண்டம் மேலும் கீழ்வருமாறு கூறுகிறது:

"அவிஜ்ஜா யதுவேவ அஸே
விராக நிரோதா ஸங்க்கார நிரோத
ஸங்க்கார நிரோதா விஞ்ஞான நிரோதோ
விஞ்ஞான நிரோதா நாமரூப நிரோத
நாமரூப நிரோதா ஸளாயதன நிரோத
ஸளாயதன நிரோதா பஸ்ஸ நிரோத
பஸ்ஸ நிரோதா வேதனா நிரோதோ
வேதனா நிரோதா தண்ஹா நிரோதோ
தண்ஹா நிரோதா உபாதான நிரோத
உபாதான நிரோதா பவ நிரோத
பவ நிரோதா ஜாதி நிரோத
ஜாதி நிரோதா ஜராமரணம் ஸோக
பரிதேவ துக்க தோமஸ் ஸு பாயாஸா நிருஜ்ஜந்தி"

    இதனை மொழிபெயர்த்துச் சாத்தனார் மணிமேகலையில் கூறுவது காண்க:
"பேதைமை மீளச் செய்கை மீளும்
செய்கை மீள உணர்ச்சி மீளும்
உணர்ச்சி மீள அருவுரு மீளும்
அருவுரு மீள வாயில் மீளும்
வாயில் மீள ஊறும் மீளும்
* ஊறு மீள நுகர்ச்சி மீளும்
நுகர்ச்சி மீள வேட்கை மீளும
வேட்கை மீளப் பற்று மீளும்
பற்று மீளக் கருமத் தொகுதி
மீளும், கருமத் தொகுதி மீளத்
தோற்றம் மீளும், தோற்றம் மீளப
பிறப்பு மீளும், பிறப்புப் பிணி மூப்புச
சாக்கா டவலம் அரற்றுக் கவல
கையா றென்றிக் கடையில் துன்பம
எல்லாம் மீளும். " (மணிமேகலை 30-ஆம் காதை 119-133)
* புத்தகத்தில் வேதனா விடப்பட்டுள்ளது.

    இந்தச் சார்புகளை (நிதானங்களை) ஊழின் வட்டம் அல்லது ஊழ் மண்டிலம் என்பர். இவ்வூழ் வட்டம் சந்தி, கண்டம், காலம், குற்றம், வினை, பயன், நோய் காரணம் என்னும் உறுப்புகளையுடையது (படம் காண்க)

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய். (குறள் - 359)

என்றபடி இச் சார்புகளை அறுத்து வீடு பெறுவதே பௌத்தர்களின் நிர்வாண மோட்சமாகும். வீடு பேறடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மைகளை (சத்தியங்களை) அறிய வேண்டும்.

நான்கு உண்மைகளாவன:
1. நோய் (துக்கம்)
2. நோய் காரணம் (துக்கோற்பத்தி)
3. நோய் நீங்கும் வாய் (துக்க நிவாரணம்)
4. நோய் நீங்கும் வழி (துக்க நிவாரண மார்க்கம்)
என்பன. இவற்றை சற்று விளக்குவோம்.

1. நோய்: பிறத்தல் துன்பம். பிணி, மூப்பு, சாக்காடடைவது துன்பம். அரற்று, கவலை, கையாறு இவை எல்லாம் துன்பந் தருவன. சுருங்கக்கூறின், புலன்களால் உண்டாகும் பற்றுகள் எல்லாம் துன்பம் தருவன என்று அறிதல் முதல் உண்மை.
"உணர்வே அருஉரு வாயில் ஊறே
நுகர்வே பிறப்பே பிணி மூப்புச் சாவே
அவலம் அரற்றுக் கவலை கையாறு என
நுவலப் படுவன நோய் ஆகும்மே " (மணி 30. 179-182)

2. நோய் காரணம்: துன்பம் விளைவதற்குக் காரணமாக இருப்பவைகளை உணர்வது இரண்டாவது உண்மை.
"அந் நோய் தனக்குப்
பேதைமை செய்கை அவாவே பற்றுக்
கரும வீட்டம் இவை காரணம் ஆகும்" (மணி 30. 183-185)

3. நோய் நீங்கும் வாய்: நோயையும் நோய்க்குக் காரணமாக இருப்பவைகளையும் நன்கறிந்து இவற்றிற்கு ஆசை (அவா) தான் காரணம் என்பதை நன்குணர்ந்து நோயினின்று விடுதலையடையும் வாயிலை அறிவது மூன்றாவது உண்மை.

"துன்பம் தோற்றம், பற்றே காரணம்
இன்பம் வீடே, பற்றிலி காரணம்" (மணி 30. 186-187)

என்னும் உண்மையை உறுதியாக உணர்தல் துக்க நிவாரணம் என்பது.

4. நோய் நீங்கும் வழி: துன்பத்தைப் போக்கி வீடு பேறாகிய நிர்வாண மோட்சத்தையடைவதற்குரிய வழி யாது எனில், அட்டாங்க மார்க்கம் என்னும் எட்டு வித ஒழுக்கத்தை மேற்கொண்டு ஒழுகுவதாகும்.
அஷ்டாங்க மார்க்கமாவன:
1. நற்காட்சி (ஸ்மயக் திருஷ்டி)
2. நல்லூற்றம், அஃதாவது நற்கருத்து (ஸம்யக் சங்கல்பம்)
3. நல்வாய்மை (ஸம்யக் வாக்கு)
4. நற்செய்கை (ஸம்யக் கர்மம்)
5. நல்வாழ்க்கை (ஸம்யக் ஆஜிவம்)
6. நல்லூக்கம், அஃதாவது நன்முயற்சி (ஸம்யக் வியாயாமம்)
7. நற்கடைப்பிடி (ஸம்யக் ஸ்மிருதி)
8. நல்லமைதி (ஸம்யக் சமாதி)

இவற்றின் விளக்கத்தை விரிந்த நூலிற் காண்க.
இந்த அஷ்டாங்க மார்க்கத்தில் சீலம் (ஒழுக்கம்), சமாதி (தியானம்), பஞ்ஞா (ஞானம்) என்னும் மூன்றும் அடங்கும். இவற்றைச் சிறிது விளக்குவோம்.
சீலம்: இது பஞ்ச சீலம், அஷ்டாங்க சீலம், தச சீலம் என மூன்று வகைப்படும்.

பஞ்ச சீலமாவது:
1. ஓருயிரையும் கொல்லாமலும் தீங்கு செய்யாமலும் இருத்தலோடு அவற்றினிடம் அன்பாக இருத்தல்.
2. பிறர் பொருளை இச்சிக்காமலும் களவு செய்யாமலும் இருத்தல்.
3. கற்புநெறியில் சிற்றின்பம் துய்த்தல்; அதாவது, முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
4. உண்மை பேசுதல், பொய் பேசாதிருத்தல்.
5. மயக்கத்தையும் சோம்பலையும் உண்டாக்குகிற மதுபானங்களை உட்கொள்ளாமை.

இந்தப் பஞ்ச சீலங்கள் இல்லறத்தார்க்கு உரியன. இவற்றோடு,
6. இரவில் தூய்மையான உணவை மிதமாக உண்ணல்.
7. பூ, சந்தனம், வாசனைச் சுண்ணம், எண்ணெய் முதலிய நறுமணங்களை நுகராமை.
8. பஞ்சணை முதலியவற்றை நீக்கித் தரையில் பாய்மேல் படுத்து உறங்குதல
என்னும் மூன்றையும் சேர்த்து அஷ்டசீலம் (எட்டு ஒழுக்கம்) என்பர்.அஷ்டசீலம் இல்லறத்தாரில் சற்று உயர்நிலை யடைந்தவர் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களாகும்.
இவற்றோடு,
9. இசைப்பாட்டு, கூத்து, நாடகம் முதலிய காட்சிகளைக் காணாதிருத்தல்.
10. பொன், வெள்ளி முதலியவற்றைத் தொடாதிருத்தல்
ஆகிய இவை இரண்டும் சேர்த்து தசசீலம் (பத்து ஒழுக்கம்) எனப்படும்.

    தசசீலம் துறவிகள் ஒழுகவேண்டிய ஒழுக்கமாகும். தசசீலத்தில் ஒழுகும் துறவி, சிற்றின்பத்தை அறவே ஒழிக்கவேண்டும். தசசீலங்களை மேற்கொண்டு, அடக்கமான பேச்சையும் அடக்கமான செயலையும் உடையவராய், உலகப் பற்றுக்களை நீக்கித் துறவறத்தை மேற்கொண்டவரே பிக்கு ஆவர். பிறகு, சமாதி (தியானம்) என்பது, துறவறம் மேற்கொண்டு தசசீலங்களில் ஒழுகுகிற துறவியானவர், கைக்கொள்ள வேண்டிய ஒழுக்கம். விலக்கவேண்டிய தீய எண்ணங்களை நீக்கி, மனத்தை ஒரு நிலையில் நிறுத்துவதே சமாதி அல்லது தியானம் என்பது. இதனால், ஐம்புலன்களினால் உண்டாகும் ஆசைகளும்; பகை, கோபம், மறதி, ஐயம், அடக்கமின்மை முதலிய தீய குணங்களும் தடுக்கப் படுகின்றன; மனம் சாந்த நிலையை அடைகிறது. பிறகு, பஞ்ஞா என்னும் ஞானநிலையில் ஒழுகவேண்டும். தியானமாகிய சமாதி ஒழுக்கத்தினாலே, தீய எண்ணங்களும் மனோவுணர்ச்சிகளும் அழிக்கப்படாமல், செயலற்று அடங்கிக்கிடக்கின்றன. திடீரென எழும்பிவிடவும் கூடும். அவ்வாறு, அவை எழும்பிச் செயற்படாதவாறு, பஞ்ஞா அல்லது ஞானம் என்னும் நுண்ணறிவைக் கொண்டு அவற்றை அழிக்க வேண்டும். இந்த ஞானந்தான், பொருள்களை உள்ளது உள்ளவாறு உணரச்செய்து, மனோவுணர்ச்சிகளை அழியச் செய்கிறது. இந்த ஞான நிலையை யடைந்தவர் உலகத்தின் உண்மையான நிலையைக் காண்கிறார். அதனால

"அநித்தம் துக்கம் அநான்மா அசுசி எனத
தனித்துப் பார்த்துப் பற்றுறுத் திடுதல்"

என்றபடி உலகம் நிலையாமையுள்ளது. துன்பம் உடையது, அநாத்மிகமானது. அசுத்தமானது என்றுணர்ந்து பற்றற்று வீடடைகின்றார்.
பௌத்த மதத் தத்துவம் ஒருவாறு சுருக்கமாகக் கூறப்பட்டது.
இது தேரவாத பௌத்த தத்துவமாகும்.

4. பௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு

கி.மு. ஐந்தாம் நூறாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்தது? இந்த மதத்தை முதல் முதல் இங்குக்கொண்டு வந்தவர் யார்? இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம்.

   கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அதாவது கி.பி. மூன்றாம் நூறாண்டுக்குப் பிறகுதான், பௌத்த மதம்  தமிழ்நாட்டில் வந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர். அவ்வாறு அவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில், கடைச்சங்க நூல்களில் பௌத்த மதத்தைப் பற்றிக் கூறப்படாததுதான். ஆனால்,  இவர்கள் கருத்துத் தவறெனத் தெரிகின்றது.  பௌத்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப் படவில்லையாயினும், அச்சங்க காலத்து நூல்களில் காணப் படுகின்றன. அதாவது, கடைச்சங்க காலத்து நூல்களாகிய மணிமேகலை சிலப்பதிகரம் மதுரைக்காஞ்சி என்னும் நூல்களில் இந்த மதத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளன. அன்றியும், பௌத்த மதப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றன. மணிமேகலை என்னும் பௌத்த காவியத்தை இயற்றிய பௌத்தராகிய கூலவாணிகர் சாத்தனார் அருளிச் செய்த செய்யுள்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் நூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. இளம்போதியார் என்பவரும் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர். இவரது பெயரே இவர் பௌத்தர் என்பதைத் தெரிவிக்கின்றது. (போதி = அரச மரம்; அரசமரத்தின் கீழே புத்தர் ஞானம் பெற்றபடியால் பௌத்தர் அரசமரத்தைத் தொழுவது வழக்கம்.) இந்த இளம்போதியார் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் கடைச்சங்கத் தொகை நூலில் 72ஆம் பாட்டகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, கடைச்சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள்  தொகுக்கப்பட்டிருக்கின்றபடியினால், அச்சங்க காலத்துக்குப் பிறகுதான் பௌத்த மதம் தமிழ்நாடு வந்திருக்கக் கூடும் என்பது தவறாகின்றது.கடைச்சங்க காலத்திலேயே, அதாவது கி.பி முதல்லாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது ஆயினும், பௌத்த மதம் தமிழ்நாட்டிற்கு முதல் முதல் எப்போது வந்தது என்னும் கேள்விக்கு இது விடையன்று.

   இக் கேள்விக்கு விடை தமிழ்நூல்களில் காணக் கிடைக்கவில்லை. ஆகையால், புறச்சான்றுகளைக் கொண்டு ஆராய்வோம். நற்காலமாக, அசோக சக்கரவர்த்தி எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றன. அசோக சக்கரவர்த்தி மௌரிய மன்னர்களுள் தலைசிறந்தவர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கி.மு 273 முதல் 232 வரையில்) தமிழ் இந்தியாவைத் தவிர ஏனைய இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ்வைத் துலகாண்ட ஒப்பற்ற மன்னர். அன்றியும் இவர், பௌத்த மதத்தை மேற்கொண்டு, இந்தியா தேசத்திலும் அதற்காப்பாற்பட்ட தேசங்களிலும் இந்தப் பௌத்த மதத்தைப் பரவச்செய்தார். இவர் பாரத நாட்டில் வெவ்வேறிடங்களில் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராச்சிக்கு உதவி செய்கின்றன என்று சொன்னோம். சௌராஷ்டிரா தேசத்திலுள்ள கிர்னார் நகரத்துக்கருகில் உள்ள பாறையொன்றில் எழுதப்பட்ட அசோக சாசனத்தில் (Edict ii) கீழ்க் கண்ட பகுதி காணப்படுகின்றது:-

 "காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர் பெருமா னுடைய (அசோகருடைய) ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப் பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலையங்களாம்."

   இந்தச் சாசனத்தில், அசோக சக்கரவர்த்தி தமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் மருத்துவ நிலையங்களை அமைத்தார் என்பது மட்டும் கூறப்படுகின்றது. ஆனால், கீழ்கண்ட இன்னொரு சாசனத்தில், இவர் தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் பரப்பிய செய்தி காணப்படுகின்றது. பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படுகின்ற இந்தச் சாசனம் (Rock Edict iii), போர்செய்து பலரைக் கொன்று அதனால் பெறும் மறவெற்றியைவிட, அறத்தைப் போதித்து அதனால் பெறும் அறவெற்றியே தமக்கு விருப்பமானது என்பதைத் தம் பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும் அசோக மன்னர் தெரிவிக்கிற செய்தியைக் கூறுகின்றது. இவ்வாறு கூறுகின்ற இந்தச் சாசனத்தில் நமது ஆராய்ச்சிக்கு உதவி செய்கின்ற பகுதியும் காணப்படுகின்றது. அது வருமாறு:-

 "தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யேசனை தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய,  தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது."

   இந்த சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டது. அசோகமன்னர், தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை - அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச்  செய்வதால் வந்த அறவெற்றியை - கைப்பற்றினார் என்னும் செய்தியை இச் சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்ட பொருள் என்னவென்றால், அசோக சக்கரவர்த்தி தூதர்களை (பிக்ஷுக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் பரவச் செய்தார் என்பதே. சரித்திர ஆராய்ச்சியாளர் அனைவரும் இக்கருத்தையே இச் சாசனப்பகுதி விளக்குவதாகக் கூறுகின்றனர்.

   அசோக மன்னர் காலத்தில்தான் பௌத்தமதம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதற்கு  வேறுவிதமான புறச்சான்றும் கிடைக்கின்றது. 'மகாவம்சம்', 'தீபவம்சம்' என்னும் பௌத்த நூல்கள் இலங்கையில் பௌத்த மதம் வந்த வரலாற்றினையும், அந்த மதத்தை இலங்கை அரசர் எவ்வாறு போற்றிப் பாதுகாத்து வந்தனர் என்னும் வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன. இலங்கைத்தீவு தமிழ்நாட்டையடுத்துள்ளதாகையாலும், தமிழ்நாட்டினைக் கடந்தே இலங்கைக்குச் செல்ல வேண்டுமாகையாலும், இலங்கையில் பௌத்தமதம் வந்த அதே காலத்தில்தான் தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் வந்திருக்கவேண்டும் என்று துணியலாம். ஆகவே தீபவம்சமும், மகாவம்சமும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். பாடலீபுரம் என்னும் நகரத்தில் அசோக சக்கரவத்தியின் ஆதரவில் மொக்கலபுத்த திஸ்ஸ என்னும் தேரரின் தலைமையில் மூன்றாவது பௌத்த மகாநாடு கூடியதென்றும், ஒன்பது திங்கள் வரையில் அந்த மகாநாட்டில் பௌத்தமத ஆராய்ச்சி நடைபெற்றதென்றும், மகாநாடு முடிந்த பின்னர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும், இந்த நூல்கள் கூறுகின்றன.

   காஸ்மீரம், காந்தாரம் என்னும் நாடுகளுக்கு மஜ்ஜந்திகர் என்னும் தேரரும், மகிஷ மண்டலத்துக்கு மகாதேவர்  என்னும் தேரரும் அனுப்பப் பட்டனர். வனவாசி நாட்டிற்கு ரக்கிதர்  என்னும் தேரரும், அபரந்தக தேசத்திற்குத் தம்மரக்கிதர்  என்னும் தேரரும், மகாராட்டிர தேசத்திற்கு மகாதம்மரக்கிதர்  என்னும் தேரரும், யோன தேசத்திற்கு மகாரக்கிதர்  என்னும் தேரரும் அனுப்பப் பட்டனர்.இமாலயத்தைச் சேர்ந்த நாட்டிற்கு மஜ்ஜிம  என்னும் தேரரும், சுவன்னபூமி நாட்டிற்குச் சோணர், உத்திரர்  என்னும் தேரர்களும் அனுப்பப் பட்டனர். பெரிய தேரராகிய மகிந்தரும் அவரின் சீடர்களாகிய இட்டியர், உத்தியர், சம்பலர், பத்தசாலர் என்பவர்களும் இலங்கைத் தீவுக்குப் பௌத்தமதத்தைப் பரவச் செய்ய அனுப்பப் பட்டனர். மகிந்தர் முதலியவர்கள், தாம் அடைந்திருந்த இருத்தியினாலே, ஆகாயவழியாகப் பறந்து இலங்கையை யடைந்தனர் என்று மகாவம்சம் என்னும் நூல் (12 ஆம் அதிகாரம்) கூறுகிறது.

  (இதில் கூறப்படுகிற காந்தாரதேசம் என்பது பஞ்சாப் தேசத்து வடபுறத்தில் உள்ள பெஷாவர், ராவல்பிண்டி என்னும் நாடுகளாகும். காஸ்மீரம் என்பது இப்போதுள்ள காஸ்மீரதேசம். மகிஷ்மண்டலம் என்பது இப்போதைய மைசூர் நாடு என்று கருதுவர் சிலர். ஆனால் விந்தியமலைக்கு தெற்கில் இருந்ததும் மகிஷ்மதி என்னும் தலைநகரைக் கொண்டிருந்ததுமான மகிஷ்மண்டலம் என்னும் தேசமாகும் என்று ஆராய்சியாளர் கூறுவர். வனவாசி என்பது இப்போதைய வடகன்னட ஜில்லாவைக் சேர்ந்த பகுதி. இங்கு இப்போதும் பனவாசி என்னும் பட்டினம் இருக்கிறது. அபராந்தக (மேற்குக் கோடி) தேசம் என்பது குஜராத்து, கத்தியவார், கச்சு, சிந்து என்னும் நாடுகளைச் சேர்ந்த பாகம். மகாராட்டிரம் என்பது இப்போது மராட்டி பாஷை பேசுகிற மகாராட்டிர தேசம் ஆகும். யோன தேசம் என்பது யவன நாடு. இது இந்திய தேசத்துக்கப்பால் வடமேற்குப் பக்கத்தில் உள்ள தேசம். இமாலயம் என்பது இமயமலைச்சாரலைச் சேர்ந்த நாடுகள். சுவர்ணபூமி என்பது பர்மா தேசம் என்று கருதுவர் சிலர். ஆனால், கர்ணசுவர்ண எனப்படும் வங்காளதேசம் என்றும், மத்திய இந்தியாவில் உள்ளதும் கங்கையாற்று ஒரு கிளையாக உள்ளதும் ஆன சோணை நதி (இரண்ய வாஹ) யைச் சூழ்ந்த நாடு என்றும் ஆராய்ச்சி வல்லார் கருதுவர். இலங்கை அல்லது தம்பபண்ணி (தாம்ரபரணி) என்பது இப்போதைய சிங்களத் தீவு ஆகும்.)

   இவ்வாறு இந்தியாவிலும் அதற்கு அண்மையிலும் உள்ள நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்களை அனுப்பிய மூன்றாவது பௌத்த சங்கம், தமிழ் நாட்டிற்குப்  பிக்ஷுக்களை அனுப்பியதாக இலங்கை நாட்டு நூலாகிய மகாவம்சம் கூறவில்லை. ஏன்? இதன் காரணம் என்ன? ஆனால், மேலே காட்டியபடி, அசோக சக்கரவர்த்தி எழுதியுள்ள கல்வெட்டுச் சாசனங்கள் இரண்டும் (Edicts ii, and iii)  தமிழ்நாட்டிலே பௌத்த பிஷுக்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றன. அன்றியும் அசோக சக்கரவர்த்தியும் அவரால் அனுப்பப்பட்ட மகேந்திர தேரரும் கட்டிய விகாரைகளும் தூபிகளும் தமிழ்நாட்டிலே இருந்தன என்று வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன. யுவாங் சுவாங் என்னும் சீனநாட்டுப் பௌத்தர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பௌத்தசமய ஆராய்ச்சி செய்தார். அவர் எழுதியுள்ள தமது யாத்திரைக் குறிப்பில் கீழ்கண்ட செய்திகள் கூறப்படுகின்றன. (யுவாங் சுவாங் கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்தார்.) காஞ்சிபுரத்திலே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட நூறு அடி உயரம் உள்ள பௌத்த ஸ்தூபி இருந்ததையும், சோழ நாட்டிலே அசோக சக்கரவர்த்தி  கட்டிய ஒரு பௌத்த விகாரை இருந்ததையும் இவர் குறிப்பிடுகிறார். அன்றியும், பாண்டி நாட்டின் தலைநகருக்கு (மதுரைக்கு) அருகிலே அசோக சக்கரவர்த்தியின் தம்பியாகிய மகேந்திரரால் கட்டப்பட்ட ஒரு சங்காராமம் (பௌத்த விகாரை) இருந்ததாகவும் அதற்குக் கிழக்கே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபி இருந்ததாகவும் இவை இரண்டும் இவர் காலத்தில் இடிந்து சிதைந்து புல் பூண்டு முளைத்துக் காணப்பட்டன என்றும் இவர் குறிப்பிடுகிறார் 1.

 1. Beal Records if the western world ii. p. 231

   பர்மா தேசத்துப் பௌத்தப் பிக்குப் பரம்பரையைக் கூறுகிற வரலாறு (Talaing Records)  காஞ்சிபுரத்துக்கு அருகிலே பதரதிட்டை என்னும் இடத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தம்மபாலர் என்னும் பௌத்த பிக்கு வசித்திருந்தார் என்று கூறுகிறது. இந்தத் தர்மபாலர் என்பவர் பேர்போன ஆசாரிய தம்மபாலர் ஆவர். இவர் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்த பிக்ஷு. இவர் பௌத்த வேதமாகிய திரிபிடகத்தின் சில பகுதிகளுக்குப் பாலி மொழியில் உரை எழுதியிருக்கிறார். இவர் கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். தாம் எழுதிய நூலில், அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தாம் தங்கியிருந்து இந்நூலை எழுதியதாகக் கூறியிருக்கிறார்.

  சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படுகிற இந்திரவிகாரை என்பது மகேந்திர தேரரால் கட்டப்பட்ட விகாரை என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.

  இவ்வாறு அசோக சக்கரவர்த்தியின் சாசனங்களும், ஏனையோர் சான்றுகளும் தமிழ்நாட்டிலே அசோக சக்கரவர்த்தியும் அவர் அனுப்பிய மகேந்திரரும் கட்டிய விகாரைகளும் தூபிகளும் இருந்த செய்தியைக் கூறுகின்றன. ஆகவே, எனைய நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்கள் அனுப்பப்பட்டது போலவே தமிழ்நாட்டிற்கும் அனுப்பபட்டிருக்கவேண்டும். அவ்வாறு அனுப்பட்டவர்கள் மகேந்திர தேரரும் அவருடன் வந்த பிக்ஷுக்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், இச் செய்திகளை இலங்கை நூலாகிய மகாவம்சம் ஏன் கூறாமல் மறைத்துவிட்டது? இதன் காரணம் யாது?

   பண்டைக் காலத்தில்  தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச் சென்று அடிக்கடி அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடியாலும், அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான இலங்கையாருக்கும் போர் நிகழ்ந்து வந்தபடியாலும், மகேந்திரர்  தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள், பகைமை காரணமாகக் கூறமல் விட்டன. மகத நாட்டிலிருந்து நேரடியாக பௌத்த மதம் தமது இலங்கைத் தீவுக்கு வந்தது என்னும் பெருமையையடைவதற்காக இலங்கை பிக்குகள் இதனை மறைத்துவிட்டார்கள் என்று வின்ஸென்ட் ஸ்மித் என்பவர் கூறுகிறார். 1  (1.  P45 Asoka 3rd Edition by Vincent A. Smith.)

    இவர் கருத்தையே ஆராய்ச்சி வல்லார் ஒப்புக் கொள்கின்றனர். வட இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர், கடல் வழியாகப் பிராயணம் செய்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கடல் பிரயாணம்  செய்தவர் இலங்கைக்குச் செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்தில் பேர்பெற்று விளங்கியதுமான காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக்கூடும் என்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப்பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ்நூல்களில் கூறப்படும் இந்திர விகாரைகளென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

  பிக்ஷுக்கள் ஆகாய வழியாகப் பறந்து நேரே இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் என்னும் இலங்கை நூல் கூறுகிறதென்றாலும், அசோகர் அனுப்பிய பௌத்த பிக்ஷுக்கள் இலங்கைக்குப் போகும் வழியில் தமிழ்நாட்டிலே தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்திருக்க வேண்டும் என்று கருதுவர் அரசாங்க சிலாசாசன ஆராய்ச்சியாளர். 2.  (2. EP. Rep 1097 Page 61)

 அவ்வாறு கருதுவர் வேறு சிலரும். 3.   (3. Asoka;s Mission to Ceylon and some connected problem by Jothirmay Sen. Indian Historical querterly Vol V.PP 667-678)  மகேந்திரர் நேரே இலங்கைக்கு ஆகாய வழியாகப் பறந்து சென்றார் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுவது ஐயப்படுவதற்குரியது என்றும், தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தான் மகேந்திரர் இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் மற்றோர் ஆராய்ச்சியாளரும் கருதுகிறார். அவர் கூறுவதன் சாரமாவது: அசோகருடைய இரண்டு (Rock Edicts ii, and iii) சாசனங்களில் கூறப்படுகிற தம்பபன்னி (தாம்பிரபரணி) என்பது தம்பபன்னி தீவாக (இலங்கைத் தீவாக) இருக்க வேண்டும் என்பதில்லை. அது தாம்பிரபரணி பாய்கிற, தற்போது திருநெல்வேலி என்று வழங்கப்படுகிற ஜில்லாவாகும். யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் கூறுகிற மலயகூடம் என்னும் தேயமும் இதுவாகும். இங்கிருந்து படகேறிச் சிறிது தூரத்தைக் கடந்தால் தம்பன்னிக்கு (இலங்கைக்குச்) செல்லலாம். 1   1. Pages 60,62 on the Chronicles of Ceylon by Bimala Chrun Law

    பாண்டியநாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக் குகைகளில் பிக்குகள் படுத் துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கி யமைக்கப்பட்ட படுக்கைகளும் அப்படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை, இலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காகப் பண்டைக்காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள் ஊருக்குள் வசிக்கக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால், அவர்கள் வசிப்பதற்காக மலைப் பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலத்து வழக்கம். இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் அமைப்பைக் கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும், இப் பாண்டி நாட்டுக் குகைகளில் காணப்படும் எழுத்துக்களைக் கொண்டு (இவை அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படும் பாண்டிநாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி என்னும் கிராமத்துக்கருகில் இருக்கின்றது. 'அரிட்டாபட்டி' என்னும் பெயர், பௌத்த மதத்தைப் பரவச் செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றது. இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், ஆனது பற்றியே இக்குகைக்கருகில் உள்ள சிற்றூர் 'அரிட்டாபட்டி' என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து பௌத்த மதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டிநாட்டில் உள்ள 'அரிட்டாபட்டி' என்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.

   மேலே எடுத்துக்காட்டிய சான்றுகளினாலே, யாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கப் பெற்றோம். அதாவது தமிழ்நாட்டில் பௌத்தமதம் எந்தக் காலத்தில் வந்தது? இந்த மதத்தைக் கொண்டுவந்து இங்குப் புகுத்தியவர் யாவர்? என்னும் வினாக்களுக்கு, கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்த மதம் தமிழ்நாட்டில் வந்ததென்றும், இதனை இங்குக் கொண்டு வந்து புகுத்தியவர் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகேந்திரரும் 1 மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவார் என்றும் விடை கண்டோம்.

 1. இந்த மகிந்தர் (மகேந்திரர்) அசோக சக்கரவர்த்தியின் மகனார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள நூல்கள் இவரை அசோக மன்னருடைய தம்பியார் என்று கூறுகின்றன. மகனார் ஆயினும் ஆகுக; தம்பியார் ஆயினும் ஆகுக இவர் அசோக மன்னருடைய உறவினர் என்பது மட்டும் உறுதி.

5. பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு

பௌத்தமதம் வடநாட்டினின்று தென்னாட்டிற்கு எந்தக் காலத்தில் வந்ததென்பதை முன் அதிகாரத்தில் ஆராய்ந்தோம். இந்த மதம் தமிழ்நாட்டில் எவ்வாறு பரவியது என்பதனை ஈண்டு ஆராய்வோம்.

     இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்' என்றால் பௌத்த பிக்ஷுக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தம்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.

     புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின்பற்றியொழுகிய பிக்ஷுக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம் மதக்கொள்கையைப் பரவச் செய்தது போலவே, தமிழ்நாட்டிலும் வந்து நகரம், கிராமம் முதலிய எல்லாவிடங்களிலும் தமது மதக் கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக்  கல்வியையுங் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த  கோவலன் மகள் மணிமேகலை என்பவள், பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலை 17ஆம் காதையினால் அறிகிறோம். அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும் என்று கேட்க, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையினால் அறிகிறோம். அவ்வறக்கோட்டம்,
 "அரசன் ஆணையின் ஆயிழை அருளால்,
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்,
தீப்பிறப் புழந்தோர் செய் வினைப் பயத்தால்
யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்
பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்,
அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்,
அட்டிற் சாலையும், அருந்துநர் சாலையும்
கட்டுடைச் செல்வம் காப்புடைத் தாக"

    ஆயிற்று என்று மணிமேகலை 20 ஆம் காதையில் அறிகிறோம். இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்து கொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்து வந்தபடியால், இந்த மதம் தமிழ்நாட்டிலிலும் நன்கு பரவிவளர்ந்தது.

     இவையன்றியும், இந்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும் எக்குடியிற்பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம்மதக் கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகிறது. இச்செய்திகளெல்லாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். பௌத்தமதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலயிரப்பிரபந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது.

6. பௌத்த மதம் மறைந்த வரலாறு

பௌத்த மதம் தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம்.  செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம் பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம்.

     பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை. பௌத்த மதத்தை உண்டாக்கிய சாக்கிய புத்தரும், ஜைன மதத்தையுண்டாக்கிய  வர்த்தமான மகாவீரரும், ஆசீவக மதத்தையுண்டாக்கிய கோசால மக்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர். இந்த மதங்கள் உண்டான காலத்திலே வைதீக மதமும் இருந்தது. இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிற்கு வந்தன. பௌத்த மதம் அசோக சக்கரவர்த்தி காலத்திலே தமிழ்நாட்டில் பரவச் செய்யப்பட்டது என்று அறிந்தோம். ஜைன மதம், அசோக சக்கரவர்த்தியின் பாட்டனான சந்திரகுப்த அரசன் காலத்தில் தென்னாடு வந்ததாகச் சான்றுகள் உள்ளன. சற்றேறத்தாழ இதே காலத்தில்தான் வைதீக பிராமண மதமும், ஆசீவக மதமும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். அக் காலத்தில், வடநாட்டு மதங்களினின்று வேறு பட்டதும் தனிப்பட்டதுமான ஒரு மதத்தைத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். வடநாட்டு மதங்களின் தொடர்பற்ற புராதன மதமாக இருந்தது அக்காலத்துத் தமிழர் மதம்.

     வடநாட்டினின்று தென்னாடு போந்த மேற்கூறிய நான்கு மதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கையுடையவை. ஒன்றோடொன்று  பெரும்பகை கொண்டவை. இந்த மதங்கள் செற்றங் கொண்டு ஒன்றையொன்று அழித்தொழிக்க அற்றம் பார்த்திருந்தன. அமைதியாக வாழத்தெரியாமல், ஒன்றையொன்று இழித்துப் பழித்துப் பேசி வந்தன. அமைதியாக இருந்த தமிழ்நாட்டில் இந்த வடநாட்டு மதங்கள் வந்து சமயப்பூசல்களைக் கிளப்பிவிட்டன. தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து, தத்தம் மதத்திற்குச் செல்வாக்கும் சிறப்பும் தேடிக்கொள்ள இந்த மதங்கள் முயற்சி செய்தன. பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவும், அரசர்களையும் செல்வர்களையும் வசப்படுத்திச் செல்வாக்கடையவும் இவை முயன்றன. தமிழர் கொண்டாடும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் தக்க அமயமாகக் கொண்டு இந்த வடநாட்டு மதங்கள் தத்தம் கொள்கைகளைத் தமிழ்மக்களுக்குப் போதித்து வந்ததாகத் தெரிகின்றது. இவ்வித சமயப் போட்டியில் செற்றமும் கலகமும் ஏற்பட்டன. இந்தக் கலகங்களை அடக்க அரசன் தலையிட வேண்டியது ஆயிற்று.
"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்;
பற்றா மாக்கள் தம்முட னாயினும்,
செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் "
                                              (மணிமேகலை 01-60-63)

என்று அரசன் திருவிழாக் காலங்களில் பறையறைவித்தான் என்பதை மணிமேகலை என்னும் காவியத்தினால் அறிகின்றோம். என்றாலும், சமயப்போர் நின்றபாடில்லை.

     தமிழ்நாட்டில், செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் முதல் முதல் வெற்றி பெற்றுச் செல்வாக்கடைந்தது பௌத்த மதம். இந்தச் சமயம் செல்வாக்கடைந்த காரணத்தை முன் அதிகாரத்தில் கூறினோம். இச்சமயப் போட்டியில் முற்றும் பின்னடைந்துவிட்டது ஆசீவகமதம். ஆகவே, பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு மட்டுந்தான் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்து வந்தது.  பௌத்தமதம் முதன்முதல் செல்வாக்கும் சிறப்பும் பெற்றுத் தமிழ்நாட்டில் விளங்கியது என்று கூறினோம். ஆனால், இதன் செல்வாக்கைக் கண்டு ஜைன மதமும், வைதீக சமயமும் பின்னடைந்துவிடவில்லை. இவை வாளா இராமல், பௌத்தத்தை எதிர்த்துத் தாக்கிய வண்ணமாய், அதன் வீழ்ச்சிக்கு வழிகோலிக் கொண்டேயிருந்தன. தனது நிலையைக் காத்துக் கொள்ளப் பௌத்தம் இந்த இரண்டு பிறவிப்பகையுடன் போராட வேண்டியிருந்தது. கடைசியாக, நாளடைவில், பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு வழியும் ஏற்பட்டு விட்டது.

     ஜைனம், வைதீகம் என்னும் புறப்பகை ஒருபுறமிருக்க, அகப்பகையும் தோன்றிவிட்டது.  பௌத்தத்திற்குள்ளேயே சில பிரிவும் உண்டாயின. ஈனயானம், மகாயானம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகள் தோன்றி அவற்றினின்றும் உட்பிரிவுகள் பல கிளைத்து வளர்ந்தன. சிராவகயானம், மகாயானம், மத்திரயானம் என்னும் மூன்று பிரிவுகளை நீலகேசியுரையினால் அறிகின்றோம். 'ஐயுறுமமணரும், அறுவகைத் தேரரும்' என்று ஆறுவகைப் பிரிவினரான தேரர்கள் (தேரர் - பௌத்த பிக்குகள்) இருந்ததாகத் திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகின்றார். இந்தப் பௌத்த உட்பிரிவினர் தமக்குள்ளேயே தர்க்கம் செய்து போரிட்டுக் கொண்டனர். இந்த உட்பிரிவுகளால் அந்த மதத்தின் வலிமை குன்றிவிட்டது.  உடம்பிலே தோன்றிய நோய் நாளடைவில் உடலையே அழித்துவிடுவதுபோல, இந்த உட்பிரிவுகளே பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு முதற்காரணமாயிருந்தன.

     அன்றியும், பொதுமக்களாலும் அரசர்களாலும் செல்வர்களாலும் அளிக்கப்பட்ட செல்வத்தினால், பௌத்த விகாரைகளில் வசித்த பிக்ஷுக்கள் தங்கள் கடமையை மறந்து, செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆகவே, இவர்களிடத்தில் பொது மக்களிடமிருந்து மதிப்புக் குன்றவும், பௌத்தம் தன் செல்வாக்கினை இழக்க நேரிட்டது. இவைபோன்ற குற்றங் குறைகளும் உட்பிரிவுகளும் ஏற்படாமலிருந்தால், பௌத்த மதம் தனது புறப்பகை மதங்களுடன் போரிட்டுக் கொண்டே இன்றளவும் ஓரளவு நிலைபெற்றிருப்பினும் இருக்கும். ஆயினும், குறைபாடுகளும் உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டபடியால் அது புறப்பகையாகிய ஜைன வைதீக மதங்களுடன் போராட முடியாமல் வீழ்ச்சியடைந்து விட்டது.

     கி.பி ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டிற்குப் பின்னர் பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைன மதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ஆனால், அப்பொழுதும் வைதீக மதம் உயர்நிலை அடைய முடியாமலேயே இருந்தது. பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது. பெற்றதும், தனது கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் பெருந்தடையாயிருந்த பௌத்தத்தை முன்னைவிடக் கடுமையாகத் தாக்கி, அதை நிலைகுலையச் செய்துவிட்டது. பௌத்தக் கோயில்கள் ஜைனக் கோயில்களாக மாற்றப்பட்டன. பௌத்த பிக்ஷுக்கள் வசித்த மலைக்குகைகள், ஜைனக்குகைகளாக மாற்றப்பட்டன. அகளங்கர் என்னும் ஜைனர், கி.பி 8 ஆம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே. ஆனால், பௌத்தத்தை வீழ்ச்சியடையச் செய்து ஜைனம் வெற்றிக்கொடி நாட்டியபோதிலும், பௌத்தம் முழுவதும் அழிந்துவிடவில்லை. வலிமையிழந்த அந்த மதம் தமிழ்நாட்டில் ஓரளவில் ஊடாடிக் கொண்டிருந்தது.

     இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு இதுகாறும் பின்னணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத் தொடங்கி, ஜைன மதத்தை வீழ்த்தி, உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான் பௌத்தமதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.

     வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடையதாயிருந்தபடியாலும், இவற்றிற்கு மேலாக,  பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. ஆகவே, கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் நாடுவந்த வைதீக பிராமண மதம் கி.பி ஆறாவது, அல்லது ஏழாவது நூற்றாண்டு வரையில் பொதுமக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது.

     கி.பி ஆறாவது, அல்லது ஏழாவது நூற்றாண்டுகளுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படைக் கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு  புத்துயிர் பெற்றது. அதாவது, யாகங்களில் உயிர்கொலை செய்வதை நிறுத்தியதோடு, கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட (தமிழ்த்) தெய்வங்களைத் தன் மதக் கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்றுவிட்டது. இந்த மாறுதலுடன், 'பக்தி' இயக்கத்தை மேற்கொண்டபடியால், இந்த மதம் பொதுமக்கள் ஆதரவைப் பெறவும், பண்டைப் பகையுள்ள ஜைன, பௌத்த மதங்களைக் கடுமையாகத் தாக்கித் தோற்பிக்கவும் முடிந்தது. சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர், திருமங்கையாழ்வார் போன்ற சைவ வைணவத் தொண்டர்கள் தோன்றிப் புதிய இந்து மதத்தை நிலை நாட்டவும், ஜைன பௌத்த மதங்களை ஒழிக்கவும் தலைப்பட்டார்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தப் புதிய வைதீக இந்து மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போர் தொடங்கி வெற்றி பெற்றது. இந்து மதத்தின் வெற்றிக்குக் காரணம் யாதெனின், அக்காலத்தில் இந்து மதம் பிரிவினையின்றி ஒரே மதமாக இருந்ததேயாகும். திருமால், சிவன் என்னும் இருதேவர் அதில் இருந்த போதிலும், வைணவமதம் என்றும் சைவமதம் என்றும் பிற்காலத்துப் பிரிந்து நின்றதுபோல, அக்காலத்தில் இந்து மதம் பிரிந்திருக்கவில்லை. புதிய வைதீக மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போராடிய காலத்தில், வைணவம், சைவம் என்றும், வடகலை, தென்கலை என்றும் வீரசைவம், சித்தாந்த சைவம் என்றும், ஸ்மார்த்த மதம் என்றும் பல பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆகவே ஒற்றுமையுடன் போரிட்ட படியால், ஜைன, பௌத்த மதங்களை அது வீழ்ச்சியடையச் செய்து விட்டது. தமிழ்நாட்டில் ஜைனமதம், என்றும் தலைதூக்க முடியாதபடியும் ஏற்கனவே ஜைனமதத்தால்  வலிமை குன்றியிருந்த பௌத்த மதம் அடியோடு ஒழியும்படியும் இதனால் நேர்ந்தது. சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்த பொன்னால் அமைந்த புத்தச்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக்கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்தமதத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

     கலிகால சாகித்ய பண்டித பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி.பி 1256 இல் சோளி (சோழ) தேசத்திலிருந்து பௌத்த பிக்ஷுக்களை இலங்கைக்கு வரவழைத்துப் பௌத்த மதத்தை வலிவுறச் செய்தான் என்று இலங்கைச் சரித்திரத்தினால் அறியப்படுகின்றதாகலின், கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் சோழ தேசத்தில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்தது என்று துணியலாம்.  கி.பி பதினான்காம்  நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டில் சிற்சில இடங்களில் பௌத்தரும் பௌத்தப் பள்ளிகளும் இருந்துவந்தன. பின்னர்,  நாளடைவில், பௌத்தம் தமிழ்நாட்டில் மறைந்து விட்டது; மறக்கவும் பட்டது. ஆனால் அதன் பெரிய கொள்கைகள் மட்டும் இன்னும் இந்துமதத்தில் போற்றப்பட்டு வருகின்றன.

7. பௌத்த திருப்பதிகள்

 தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந்தோம். பொதுவாகத் தமிழ்நாட்டிலே சிறப்புப் பெற்றிருந்ததென்றாலும், சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களிலும் செல்வாக்குற்றிருந்தது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகளைக் கூறுவோம்.

    காவிரிப்பூம்பட்டினம்: சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப்பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் கால முதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்வாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாலிமொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் 'கவீரபட்டினம்' என்று கூறப்பட்டுள்ளது. மிகப் பழமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தாரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச் சென்று வந்ததால் அவரது தவத்துக்கு இடையூறாயிருந்தது பற்றி அவர் அவ்விடத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத் தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர்.

    கி.மு மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர், (மகேந்திரர்) என்பவர் இலங்கைக்குச் சென்று அங்கு பௌத்தமதத்தைப் பரப்புவதற்கு முன், சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி அங்கு ஏழு விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூறப்படுகின்ற இந்திரவிகாரை என்பவை இவர் கட்டியவைகளேயென்றும், மகேந்திரர் கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறபட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச்சியிற் சிறந்த அறிஞர்கள் கருதுகின்றனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இந்த விகாரைகளின் தலைவராக அறவண அடிகள் என்னும் தேரர் இருந்தார் எனத் தெரிகின்றது. இந்த ஏழு இந்திர விகாரைகளையன்றி, 'உவவனம்' என்றும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத பீடிகையை அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கி வந்தார்கள்.

    அன்றியும், இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுத்துச் 'சுடுகாட்டுக் கோட்டம்' என்று ஏனைய மதத்தோரால் கூறப்பட்டதும், 'சக்கரவாளக் கோட்டம்' என்று பௌத்தரால் போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக் கோட்டத்தினுள் 'சம்பாபதி' என்னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்ததென்பதையும், அக்கோயிலின் தூணொன்றில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும், 'சக்கரவாளம்' என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தென்பதையும் மணிமேகலை என்னும் நூலினால் அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் 'குச்சரக் குடிகை' என்றும், 'முதியாள் கோட்டம்' என்றும் வேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அரசாண்ட மாவண் கிள்ளி என்னும் அரசன், பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவு பூண்ட மணிமேகலையின் வேண்டுகோளின்படி, சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக் கொள்ளும்படி அதனைப் பௌத்தர்களுக்குக் கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டடத்தைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துக் கொண்டனர் என்றும் மணிமேகலை நூலினால் அறிகின்றோம், அறவண அடிகள், மணிமேகலை முதலிய பௌத்தர்கள் இவ்வூரில் இருந்தனர்.

    'இரசவாகினி' என்னும் பாலிமொழியில் உள்ள பௌத்த நூலில் சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவபெருமானுக்குக் கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி நடைபெறும்போது சில பௌத்த துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கினார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

    கி.பி. நாலாம் நூற்றாண்டில் அச்சுத விக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசிரியர், சோழநாட்டையும் காவிரிப்பூம் பட்டினத்தையும் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். காவிரிப்பூம்பட்டினம் செல்வத் தொகுதியும் மக்கட்கூட்டமும் நெருங்கிய இடம் என்றும், அப்பட்டினத்தில் இவர் தங்கி இருந்த பௌத்தப் பள்ளி கணதாஸர் என்பவரால் காணப்பட்டதென்றும், அப் பள்ளி நெடுஞ்சுவர்களால் சூழப்பெற்றுப் பெரிய வாயில்களையுடைய தென்றும், பள்ளிக் கட்டடங்கள் பெரியனவாய் வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம்போல வெண்ணிறமாக விளங்கும் என்றும் தாம் எழுதிய அபிதம்மாவதாரம் என்னும் பாலி நூலில் இவர் எழுதியிருக்கிறார். இவ்வாறு இவர் சிறப்பித்துக் கூறுகிற செய்யுட்பகுதி சொற்சுவையும் பொருளழகும் ஓசையின்பமும் சிறந்துள்ளது என்று பாலி மொழியறிந்த பண்டிதர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். அப்பகுதி வருமாறு:

"நரநாரீ கணாகிண்ணே அஸங்கிண்ணே குலாகுலே
பீதே ஸப்பங்க ஸம்பன்னே பஸன்னே ஸரிதோதகே
நானாரதன ஸம்பன்னே விவிதாபன ஸங்கதே
காவேரிபட்டணே ரம்மே நானாராமோ பஸோபிதே
கேலாஸ ஸிகராகார பாஸாத பதிமண்டிதே
காரிதே கணதாஸேன தஸ்ஸனீய மனோரமே
விஹாரே விவிதாகார சாருபாகார கோபுரே
தத்தா பாசீன பஸ்ஸே மயா நிவஸதாஸதா
ரம்மஸல்லேக ஸாகல்ய ஸீலாதிகுண ஸோபினா
அயம் ஸுமதீனா ஸாது யாசிதேன கதோகதோ."

    அன்றியும், புத்தவம்சம் என்னும் நூலுக்கு இவர் எழுதிய மதுரத்தவிலாஸினீ என்னும் உரையின் இறுதியிலும் காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் கட்டிய பௌத்த விகாரையைக் கீழ்வருமாறு கூறியிருக்கிறார்:

"காவீர ஜல ஸம்பாத பரிபூத மஹீதலே
காவேரி பட்டணே ரம்மே நானா நாரீ நராகுலே
காரிதே கணதாஸேன ஸணவாசேன ஸாதுனா
விஹாரே விவிதாகார சாரு பாகார கோபுரே"

    பூதமங்கலம்: இதுவும் சோழ நாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று; இவ்வூரில் வேணுதாசர் என்பவர் கட்டிய பௌத்தவிகாரையில் ஆசாரிய புத்ததத்ததேரர் தங்கியிருந்தபோது விநயவிநிச்சயம் என்னும் நூலைப் பாலிமொழியில் இயற்றினார். இந்த ஆசாரிய புத்ததத்ததேரர் சோழ நாட்டுத் தமிழர். தம் நூல்களில் சோழ நாட்டினையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் சிறப்பித்துக் கூறியது போன்று, இந்தப் பூதமங்கலம் என்னும் ஊரையும் சிறப்பாகக் கூறியுள்ளார்.

    சோழநாட்டிற்குக் கொப்பூழ் (நாபி) போன்றிருந்த பூதமங்கலம் வாழை, தென்னை, பனைமரங்கள் அடர்ந்த சோலைகளாலும், அல்லி, ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களால் நிரம்பப்பெற்ற குளங்களாலும் சூழப்பெற்றதென்றும், செழிப்பும் செல்வமும் பெருகிய இடம் என்றும், காவிரியாற்றின் நீர் பாயப்பெற்ற சோலைகளையுடையதென்றும் அங்கு, அகழியால் சூழப்பெற்ற நெடுஞ்சுவர்களையுடைய வேணுதாசர் என்பவரால் அமைக்கப்பட்ட விகாரையில் தங்கியிருந்தபோது தாம் விநயவிநிச்சயம் என்னும் நூலை எழுதியதாகவும் அழகுபடக் கூறுகிறார்:

"ஸெட்டஸ்ஸ சோளரட்டஸ்ஸ நாபிபூதே நிராகுலே
ஸப்பஸ்ஸ பன லோகஸ்ஸ காமே ஸம்பிண்டிதே விய
கதலீ ஸாலா தாலுச்சு நாளிசேர வனாகுலே
கமலுப்பல ஸஞ்சன்ன ஸலிலாஸய ஸோபிதே
காவேரி ஜலஸம்பாத பரிபூத மஹீதலே
இத்தே ஸப்பங்க ஸம்பன்னே மங்கலே பூதமங்கலே
பவராகார பாகார பரிஃகா பரிவாரிதே
விஹாரே வேணுதாஸஸ்ஸ தஸ்ஸனீய மனோரமே"

என்று அவர் கூறியிருப்பது காண்க.

    ஆசாரிய புத்ததத்தர் கூறுகிற பூதமங்கலம் என்பது எந்த ஊர்? தஞ்சாவூர் ஜில்லாவில்லுள்ள பூதலூர் என்று சிலர் கருதுவர். இது தவறு. நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்து நகரம் வெண்ணி. இந்த வெண்ணி நகரத்துக்கு அடுத்துப் பூதமங்கலம் என்னும் ஊர் ஒன்று சோழநாட்டில் இருந்த செய்தி சாசனங்களால் தெரியவருகிறது.  ( S.I.I No. 5 Inscriptions of the Tanjore Temple Vol II. Part 1)

    தஞ்சை ஜில்லா மன்னார்குடி தாலுகா திருவிராமேச்சரம் என்னும் பாடல்பெற்ற கோயிலில் உள்ள ஒரு சாசனம், தென்மலிநாட்டு மேற் பூதமங்கலம் என்னும் நாட்டையும் அங்கிருந்த ஊர்க்காட்டுப் பகவதேவர் கோயிலையும் குறிப்பிடுகின்றது. இதிலிருந்து பூதமங்கலம், மேற் பூதமங்கலம் கீழ்ப்பூதமங்கலம் என்று இருகூறாகப் பிரிக்கப்பட்டிருந்த செய்தி தெரிகிறது. அன்றியும் பகவதேவர் கோயில் என்பது புத்தர் கோயிலாக இருக்க வேண்டும் என்று தெரிகிறது. புத்தருக்குப் பகவன் என்னும் பெயரும் உண்டு. மேற்கூரிய இரண்டு சாசனங்களிலும் காணப்படுகிற ஊர்தான் புத்ததத்தர் இருந்த பூதமங்கலம் ஆகும்.

    திரு மீனாட்சியம்மையாரும், இந்த ஊரைத்தான் புத்த தத்தர் குறிப்பிடுகிற பூதமங்கலம் என்று கூறுகிறார்.

    இவர் தாம் நேரில் அவ்வூருக்குச் சென்று தாம் கண்ட செய்திகளைக் கூறுகிறார். இவர் கூறுவதாவது: ஆசாரிய புத்ததத்தர் இருந்த பூதமங்கலம் வெண்ணிக் கூற்றத்து வெண்ணி நகரைச் சேர்ந்த பூதமங்கலம் ஆகும். தஞ்சாவூருக்குக் கிழக்கே 20 மைலுக்கப்பால் உள்ளதும், இப்போது கோயில் வெண்ணி என்று வழங்கப்படுகிறதும் ஆன இடம் தான் அது. இது மன்னார்குடி தாலுகாவில் இருக்கிறது. இப்போது, பூதமங்கலம் சிறு கிராமமாக இருக்கிறது. இதற்கடுத்துள்ள கிராமம் பள்ளிவிருத்தி என்று வழங்கப்படுகிறது. பள்ளிவிருத்தி என்பது பௌத்தப்பள்ளிக்காக விடப்பட்ட மானியம் என்று பொருள்படும். இப்போதுள்ள பூதமங்கலம், பள்ளிவிருத்தி என்னும் கிராமங்கள் பண்டைக்காலத்தில் பெரிய பட்டணமாக இருந்திருக்க வேண்டும். பூதமங்கலத்தில் செங்கற்களால் கட்டப்பட்டு அழிந்துபட்டுள்ள இரண்டு மேடுகளும், பள்ளிவிருத்தி கிராமத்தில் அவ்வாறே அழிந்து காணப்படுகிற மூன்று மேடுகளும் காணப்படுகின்றன. இந்த மேடுகளைத் தோண்டிப் பார்த்தால், இவற்றில் பௌத்த சின்னங்கள் ஏதேனும் கிடைக்கக்கூடும். இங்கு ஒரு புத்த உருவச்சிலையிருந்த தென்றும், அதைத் தஞ்சாவூருக்குக் கொண்டுபோய் விட்டதாகவும் கூறுகிறார்கள். இவ்வூருக்கு அருகில் உள்ள மன்னார்குடியில் இருக்கிற ஜைனக்கோயிலில் புத்தர் உருவச்சிலையொன்று காணப்படுகிறது.

    இந்தச் சான்றுகளினாலே, ஆசாரிய புத்தத்தத்தர் வசித்திருந்ததும் வேணுதாசர் கட்டிய விகாரை இருந்ததுமான பூதமங்கலம் இந்த இடமாகத்தான் இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

    புத்தமங்கலம்: கேய மாணிக்க வளநாட்டுத் திருவாரூர் கூற்றத்துப் புத்தமங்கலம் என்னும் ஊர், பேராவூர் ஆதித்தியேசுவரர் கோயில் சாசனத்தில் கூறப்படுகிறது.

    இது பௌத்தர் இருந்த ஊர் என்பது இப் பெயரே விளக்குகிறது.

    சங்கமங்கலம்: ஜயசிம்ம குலகால வளநாட்டுத் தானவநாட்டுச் சோழசிகாமணி புரத்துக் கண்டியூரின் மேற்குப் பகுதியில் சங்கமங்கலம் என்னும் ஊர் இருந்ததாக ஒரு சாசனம் கூறுகிறது. இப்பெயரே இது பௌத்தர்கள் ஊரென்று தெரிவிக்கிறது (சங்கம் - பௌத்த பிக்குகள் சங்கம்). பௌத்தராக இருந்து சைவராகிச் சிவபெருமானைக் கல்லால் எறிந்து முத்தி பெற்ற சாக்கிய நாயனார் பிறந்த ஊர் திருச்சங்கமங்கை என்று பெரியபுராணம் கூறுகிறது, இந்தச் சங்கமங்கலமும் சங்கமங்கையும் ஒரே ஊராக இருக்குமோ என்று ஐயம் உண்டாகிறது.

    போதிமங்கலம்: திருவிடைக்கழி என்னும் ஊரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் சாசனம் ஒன்று இவ்வூரைக் குறிப்பிடுகிறது. பெரியபுராணத்தில், "சாக்கியர்தம் போதிமங்கை" என்று கூறப்படுவது இவ்வூராக இருக்கலாம். இப்பெயரே, இது பௌத்தர்களுடைய ஊர் என்பதைத் தெரிவிக்கிறது. இவ்வூரில் திருஞானசம்பந்தரும் பௌத்தர்களும் சமயவாதம் செய்தனர் என்று பெரியபுராணம் கூறுகிறது. திரிபுவன சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனுடைய 13ஆவது ஆண்டில், குன்றத்து நாராயணன் என்பவர், இவ்வூரில் ஐந்து வேலி நிலம் வாங்கி, திருவிடைக்கழி சுப்பிரமணியர் கோவிலுக்குத் தானம் செய்தார்."

    திருவிளந்துறைக் கோயில்: இவ்வூர் கும்பகோணம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், கி.பி. 1580 இல், தீத்தமாயிருந்த நாயகர் கோயில் என்னும் புத்தக் கோயில் இருந்ததாகச் சேவப்ப நாயகர் காலத்தில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று கூறுகிறது.

    கும்பகோணம்: நாகேசுவர சுவாமி திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது. பகவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று. புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டு நூல்கள் கூறுகின்றன. புத்தர் கோயில்கள் பல, பிற்காலத்தில் விநாயகர் (பிள்ளையார்) கோயில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவமமும் இதற்குச் சான்றாகும்.

    திருவலஞ்சுழி: தஞ்சை ஜில்லாவில் உள்ள இவ்வூர்ச் சிவன் கோயிலுக்கு வெளியே பெரியதோர் புத்தர் உருவம் அமைந்த கற்சிலை இருக்கிறது.

    பட்டீச்சரம்: தஞ்சை ஜில்லாவில் உள்ள இவ்வூர்க் கிராமதேவதை ஆலயத்தில் புத்தர் உருவச்சிலை யொன்று இருக்கிறது.

    எலயனூர்: தஞ்சை ஜில்லாவில் நன்னிலம் தாலுகாவில் உள்ள இவ்வூரில் ஒரு புத்தர் உருவச்சிலை இருந்தது. அவ்வுருவம், இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டுவந்து வைக்கப்பட்டிருக்கிறது.

    பொன்பற்றி: வீரசோழியம் என்னும் இல்க்கண நூலை எழுதிய புத்திமித்திரர் என்னும் பௌத்தர் வாழ்ந்திருந்த ஊர் இது. சோழநாட்டு மிழலைக் கூற்றத்தைச் சேர்ந்திருந்த ஊர் என்று கூறப்படுகிறது. இப்போது இது பொன்பேத்தி என்று வழங்கப்படுகிறது. தஞ்சை ஜில்லா அறந்தாங்கி தாலுகாவில் உள்ளது. இப்போது புதுக்கோட்டை மாவட்டம்.

    புத்தகுடி: சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஊர். செயங்கோண்ட சோழவளநாட்டுக் குறும்பூர் நாட்டில் இவ்வூர் இருந்ததாகக் குலோத்துங்கச் சோழனது செப்புப் பட்டயம் கூறுகின்றது. ( Leiden grant)
    இவ்வூரின் பெயரே, இது பௌத்தர்கள் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது.

    உறையூர்: பாலிமொழியிலும் வடமொழியிலும் இவ்வூர் உரகபுரம் என்று கூறப்படுகிறது. இவ்வூரில் இருந்தபோது ஆசாரிய புத்ததத்த தேரர் அபிதம்மாவதாரம் என்னும் நூலை இயற்றினார் என அறிகிறோம். "உரகபுர நிவாஸிகேன ஆசாரியேன பத்தந்த புத்தத்தேன கதோ அபிதம்மாவதாரோ நாமாயன," என்று அந்நூல் இறுதியில் எழுதியிருப்பதனால் இதையறிகிறோம். பண்டைக் காலத்தில் இங்குப் பௌத்தர்கள் இருந்தார்களெனத் தெரிகிறது.

    பெருஞ்சேரி: மாயவரம் - திருவாரூர் இரயில்வேயில் உள்ள மங்கநல்லூர் நிலையத்திற்கு வடகிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது இவ்வூர். இங்கு 5'3'' உயரமுள்ள, உட்கார்ந்திருப்பது போன்ற புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது. இச்சிலையின் பீடத்தில் தமிழ் எழுத்துச் சாசனம் அழிந்துபோய்க் காணப்படுகிறது. இப்போது இது இருக்கும் இடத்திற்கு ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள ஒரு தோப்பில் இவ்வுருவம் முன்பு இருந்தது.

    கோட்டப்பாடி: நன்னிலம் தாலுகாவில் அம்பகரத்தூர் இரயில் நிலையத்திலிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ளது இவ்வூர். இங்கும் புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது.

    மயூரபட்டணம்: சூத்திரபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாய என்னும் பகுதிக்கு ஆசாரிய புத்த தத்த தேரர் (கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கம்) தாம் எழுதிய பபஞ்சசூடானீ என்னும் உரையின் இறுதியில், மயூரபட்டணத்தில் இருந்த புத்தமித்தர் என்னும் தேரரின் வேண்டுகோளின்படி இந் நூலை எழுதியதாகக் கூறுகிறார். மயூரபட்டணம் சில பிரதிகளில் மயூரரூபப் பட்டணம் என்றும் எழுதப்பட்டுள்ளது. இது மாயவரம் ஆக இருக்கலாம். மாயவரத்தை வடமொழியில் மயூரபுரி என்று கூறப்படுவது காண்க. இவ்வூரில் கி.பி 5ஆம் நூற்றாண்டில் பௌத்தவிகாரையும் பௌத்தர்களும் இருந்தனர் என்று அறிகிறோம்.

    நாகைப்பட்டினம்: இது சோழநாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது.

"உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்ன
தீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய்,
நற்றவர்க் கிடமாகின்றது நாகையே"

என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர்.

    இங்கு அசோக சக்கரவர்த்தியார் கட்டிய பதரதிட்ட விகாரையென்று ஒரு விகாரை இருந்தது. இந்த விகாரையில் கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசாரிய தர்மபாலர் தங்குயிருந்து நெட்டிபகரணட்டகதா என்னும் உரைநூலைப் பாலிமொழியில் எழுதினார். நாகைப்பட்டினம் நாகைநகரம் என்றும் கூறப்படுகிறது. இங்கிருந்த நாகாநன விகாரையில் மகா காசபதேரர் தங்கியிருந்தார்.

    கி.பி 720 ஆம் ஆண்டில் நரசிம்ம போத்த வர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் அக்கோயிலைச் 'சீனா கோயில்' என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மாக்கோ போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் 'சீனா கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

     கி.பி எட்டாம் அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கை யாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில் முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்துகொண்டு போய், அப் பொன்னைக் கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது குருபரம்பரப் பிரபாவம் முதலிய வைணவ நூல்களினால் தெரியவருகின்றது.

    கி.பி 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராசஇராச சோழன் காலத்தில் நாகையில் 'ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை' என்னும் பௌத்தப் பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீ விஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட ஸ்ரீமால் விஜய கோத்துங்கவர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின் படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை ஸ்ரீமாற விஜயகோத்துங்கனின் தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாதலின், இதற்குச் 'சூடாமணி விகாரை' என்று பெயராயிற்று.

    இந்தச் சூடாமணி விகாரைக்கு ராஜராஜப் பெரும்பள்ளி என்றும் பெயர் உண்டு. கடாரத்தரசன் இவ்விடத்திலேயே கட்டிய மற்றொரு விகாரைக்கு ராஜேந்திர சோழன் பெரும் பள்ளி என்று பெயர். யானைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தான். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னமே அவன் இறந்துவிட, அவனுக்குப் பின் அரசாண்ட இராசேந்திர சோழன், செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித் தந்தான். அவன் எழுதிக்கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சிச் சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச் சாசனங்களுக்கு 'லீடன் சாசனம்' (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. Epigraphica India, Vol XXIII என்னும் நூலில் இந்தச் சாசனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    கி.பி 14ஆம் நூற்றாண்டில், இவ்வூரில் சீனர்கள் வியாபாரத்தின் பொருட்டு வந்திருந்தார்கள். இவ்வூர் புத்தப்பள்ளியில் சீனர்கள் ஒரு கல்வெட்டு எழுதிவைத்தார்கள். "14ஆம் நூற்றண்டின் இடைப் பகுதியில், எழுதப்பட்ட 'தாவோ - யி -சிலியோ' என்ற சீனநூல், சீன மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்று நாகைப்பட்டினத்துப் பௌத்தப் பள்ளியில் இருந்ததாகக் கூறுகிறது" என்பர் திரு S.K. கோவிந்தசாமி பிள்ளையவர்கள். (தென் இந்திய வணிகம், கரந்தைக் கட்டுரை.)

    பர்மா தேசத்தில் ஹம்சவதி நாட்டைப் (Pegu) பதினைந்தாம் பௌத்த பிக்ஷுக்களும், சித்திர தூதன் என்னும் தூதனும் இலங்கை சென்று தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில், கப்பல் புயலில் அகப்பட்டு உடைந்துபோக நற்காலமாக உயிர் பிழைத்துக் கரையேறினார்கள் என்றும், நாகைப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்த 'பதரிகாராமம் என்னும் பௌத்தப்பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப் பள்ளிக்கருகில் சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப்பள்ளியில் புத்த தேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது கி.பி. 1477 ஆம் ஆண்டில்.

    கி.பி. 1725 ஆம் ஆண்டில், 'சீனாக்கோயில்' என்னும் பெயருள்ள ஒரு கோயில் நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலெண்டின் (Valentyn) என்பவர் எழுதியிருக்கிறார்.

    நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல் தொலைவில், 'புது வெளிக்கோபுரம்' என்றும், 'சீனாக்கோயில்' என்றும், 'கறுப்புக்கோயில்' என்றும், பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம், தாம் நேரில் 1849 ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர் வால்டர் எலியட் (Sir Walter Elliot) எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).

    இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபை பாதிரிமார் இப்போது கட்டடம் கட்டியிருக்கிறார்கள். 1867 இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டடம் கட்டிக்கொள்ள ஆங்கில அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள். (க 224 Indian Antiquary Vol Vii)

    இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 இல் வெட்டிய போது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிரிய பௌத்த உருவங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை. ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது பாதிரிமர் இதை அவருக்குக் கொடுத்தார்கள். இந்த உருவத்தின் பீடத்தில், பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்தில், 'ஸ்வஸ்திஸ்ரீ ஆகமபண்டிதர் உய்யக் கொண்ட நாயகர்' என்று எழுதப்பட்டிருக்கிறது; இன்னொரு உருவம், புத்தர் போதியின் கீழ் அமர்ந்து தியானத்தில் இருக்கும் பாவனையாக அமைந்துள்ளது. (படம் 2 காண்க). இன்னொன்று, புத்தர் இரு கைகளையும் உயர்த்தி அபயம் அளிப்பதுபோல் அமைக்கப்பட்ட உருவம். இன்னொன்று சீன முறைப்படி செய்யப்பட்ட புத்தர் உருவம்.

    நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் 'புத்தன் கோட்டம்' என்னும் பெயருள்ள அக்கிரகாரம் இருக்கிறதென்றும், பண்டைக் காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக்கோயில் இருந்திருக்க வேண்டுமென்றும், பௌத்தக்கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் இந்த அக்கிரகாரம் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறுவர் டாக்டர் கு கிருஷ்னசாமி அய்யங்கார் அவர்கள்.

    நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பௌத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் உள்ளன.

    வெள்ளனூர்: இவ்வூர் புதுக்கோட்டையில் உள்ளது. இவ்வூர் கச்சேரியின் தென்புறத்தில் புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது.

    செட்டிபட்டி: புதுக்கோட்டை குளத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வூரில், 3 அடி 9 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை ஒன்று இருக்கிறது.

    ஆலங்குடிபட்டி: இதுவும் குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கும் 3 அடி 6 அங்குலம் உயரம் உள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது.


இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம்.


    காஞ்சிபுரம்: இந்த ஊர் தொன்றுதொட்டுச் சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைகாலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாகக் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திகர் எழுதியிருக்கின்றார். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட காலத்தில், 'பைம்பூம் போதிப் பகவற்கு' ஒரு தேசியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இளங்கிள்ளி அரசாண்ட கி.பி இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், 'தருமத வனம்' என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.

    காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள், பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கியிருந்த சேரி (சேரி = தெரு) ஆதலின், அத் தெரு இப்பெயர் பெற்றது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு எனமாற்றப்பட்டிருக்கிறது. அன்றியும், 'புத்தேரித் தெரு' என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சிபுரத்தில் இருக்கிறது. அது 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங் கேட்டுத் துறவு பூண்டபின் காஞ்சிபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது.

    கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த புத்தகோஷ ஆசாரியர், பிடகநூல்களுக்கு உரைகளை எழுதியவர். இவர், தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்ஷுக்களுடன் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும், அவர்கள் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றதாகவும் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். புத்தகோஷர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்ததாகவும், அந்நூல் தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் சாமந்தபாசாதிகா என்னும் உரையில் இவர் கூறுகிறார்.

    நாளந்தா பல்கலைக் கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இருந்த ஆசாரிய தர்மபாலரும், அபிதம்மாத்த சங்கிரகம் முதலிய நூல்களை இயற்றிய அநுருத்தரும் காஞ்சியில் பிறந்தவர்கள். அநுருத்தர் காஞ்சியில் இருந்த மூல சோம விகாரையில் இருந்தவர்.

    கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திகர், காஞ்சிபுரத்தில் நூறு பௌத்தப்பள்ளிகளும் ஆயிரம் பிக்ஷுக்களும் இருந்ததாகக் கூறுகிறார். ஆசாரிய திக்நாகர், காஞ்சிக்கு அருகில் சிம்மவக்த்ரம் என்னும் இடத்தில் பிறந்தவர் என்று இந்த யாத்திரிகர் கூறுகிறார். இவர் கூறுகிற சிம்மவக்த்ரம் என்னும் ஊர் காஞ்சிக்கு அருகில் உள்ள சீயமங்கலமாக இருக்க வேண்டும்.

    காஞ்சிபுரத்தை அரசாண்ட மகேந்திர விக்கிரமன் என்னும் பல்லவ அரசன் (அப்பர் சுவாமிகள் காலத்தவன்), தான் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் என்னும் நூலில், காஞ்சியில் பல பௌத்தவிகாரைகள் இருந்தன என்றும், அவ்விகாரைகளுக்கெல்லாம் தலைமையாக இருந்த பெரிய விகாரைக்கு இராஜ விகாரை என்று பெயர் இருந்ததென்றும் கூறுகிறார்.

    காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறான். இவன் பௌத்தர்களுக்காகப் பள்ளிகளைக்கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி.பி எட்டாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சிபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

    "இன்னும் காஞ்சிபுரத்தில் கச்சீஸ்வரர் கோயில் என்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோயிலெனத் தெரிகிறது. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன. இது புத்தர் கோயில் என்பதற்கு மற்றோர் ஆதாரமிருக்கிறது. அதாவது இக்கோயில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு 'புத்தேரி' என்றும், வீதிக்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன." (பக்கம் 126. திருக்குறள் ஆராய்ச்சியும், ஜைனசமய சித்தாந்தமும், தி.அ.அநந்தநாத நயினார் எழுதியது. 1932)

    கச்சீஸ்வரர் கோயிலுக்கு நான் சென்று பார்த்தபோது, தூண்களில் மட்டும் புத்த உருவங்களைக் கண்டேன். கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த உருவங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித்தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோயில் என்னும் இராஜ சிம்மேச்சரம் ஆதியில் புத்தர் கோயிலாக இருக்க வேண்டும் என்பதற்கு அக் கோயிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.

    காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த உருவங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509 இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன. காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த உருவம் இருக்கிறது.

    இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் நிர்வாணம் அடையும் நிலையில் கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது. படம் காண்க.

    காஞ்சிபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோயில் என்னும் புத்தர்கோயில் இருந்தது. அதற்கு மானியமாகச் செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. (S.I.Epi. Rep. 1934 – 35 P. 76) இந்தக் கோயில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் உள்ளன. அவை, முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தனவாம். காமாட்சியம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்றவண்ணமாக அமைக்கப்பட்ட "சாஸ்தா" (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது காணப்படவில்லை. இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை. காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்த உருவம் ஒன்று இப்போதும் நன்னிலையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் இப்போது உள்ள மண்டபத்தைக் கட்டியபோது, அதன் அடியில் சில புத்த உருவங்களைப் புதைத்துவிட்டார்களாம்.

    கி.பி. 14ஆம் நூற்றாண்டில், இருந்த ஜாவா தேசத்துக் கவிவாணர் ஒருவர், காஞ்சிபுரத்தில் 14 பௌத்தப் பள்ளிகள் இருந்தன என்று கூறியுள்ளார். அந் நூற்றாண்டில், காஞ்சியில், பௌத்தமதத்தையும் வைணவ மதத்தையும் பிரித்தறிய முடியாதபடி இரண்டறக் கலந்திருந்தன என்று தெரிகிறது. (P. 36 Chengleput Dt. Manual. 1879)

    அறவண அடிகள், மணிமேகலை, ஆசாரிய புத்த கோஷர், சுமதி, ஜோதிபாலர், திக்நாத ஆசாரியார், போதி தரும ஆசாரியார், ஆசாரிய தருமபாலர், ஆநந்ததேரர், அநுருத்தர், புத்தாதிக்யர் முதலிய பேர் பெற்ற தேரர்கள் இவ்வூரில் வசித்தவர்கள்.

    இவர்கள் அன்றியும்,காஞ்சிபுரத்தில், கி.பி 9முதல் 11ஆவது நூற்றாண்டு வரையில் இருந்த சில பௌத்தப் பெரியார்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இப்பெயர்கள், பாடலிபுரத்தில் உள்ள பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ள பௌத்த உருவங்களின் பீடத்தில் நாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்தப் பௌத்த உருவங்கள், கயா ஜில்லாவில் உள்ள குர்கிஹார் என்னும் இடத்தில் இருந்து கிடைத்தன. குர்கிஹார், பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பௌத்த இடமாக இருந்தது. இங்கிருந்து கிடைத்த, உலோகங்களால் செய்யப்பட்ட பௌத்த உருவங்களில் 17 உருவங்கள் காஞ்சிபுரத்திலிருந்த பௌத்தப் பெரியவர்களால் அளிக்கப்பட்டவை. (Ninety Three Inscriptions on the Kurkihar bronzes. Patna Museum. by A. Banerji Sastri. The journal of the Bihar andOrissa Research Society Vol. xxvi. 1940 ). அவர்கள் பெயர் வருமாறு:

    அம்ருதவர்மன், புத்தவர்மன், தர்மவர்மன், தூதசிம்மன், பிரபாகரசிம்மன், மஞ்சுஸ்ரீ, வீரியவர்மன், புத்தவர்மன், (இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்.) புத்த ஞானர், சுகசுகர், விரோசன சிம்ம ஸ்தவிரர் (இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில், பிறந்து, வேத வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் அன்னும் பௌத்தகுருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுபெயர் கொண்டவர்.) ரகுலவர்மர், சந்திரவர்மர், நாகேந்திரவர்மர், வீரவர்மர், அவலோகித சிம்மர் (இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்.) இவர்கள் எல்லோரும் பௌத்த பிக்ஷுக்கள் என்று தெரிகின்றனர். இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். இவர்கள் கி.பி 9 முதல் 11ஆம் நூற்றண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இருந்தவர்கள்.

    திருப்பாதிரிப்புலியூர்: இப்பொழுது கூடலூருக்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் முற்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம் ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை.

    சங்கமங்கை: இதுவும் தொண்டை நாட்டிலிருந்ததாகத் தெரிகிறது. பௌத்தராயிருந்து, பின்னர் காஞ்சிபுரஞ் சென்று பௌத்த தருமத்தை நன்கு கற்று, பின்னர் சைவசமயத்தைச் சேர்ந்த சாக்கிய நாயனார் இவ்வூரில் பிறந்தவர். இந்த ஊரின் பெயரே, இது பௌத்தரது ஊர் என்பதை தெரிவிக்கும். சங்கம் என்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. அதாவது, பௌத்த பிக்ஷுக்களுக்குச் சங்கம் என்பது பெயர். எனவே, சங்கமங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பான தென்பதைத் தெரிவிக்கின்றது.

    ஆவுர்: வட ஆர்க்காடு ஜில்லா திருவண்ணாமலை தாலுகாவில் உள்ளது இவ்வூர். இவ்வூரில் இடிந்து போன சிவன்கோயில் சாசனம், கோப்பெருஞ்சிங்க தேவர் II உடைய 30 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், இவ்வூர் "பெண்ணை வடகரை சேதிமண்டலத்து ஆவுர்" என்றும், இக்கோயில் திருவகத்தீஸ்வரம் உடைய நாயனார் என்றும் கூறப்படுகிறது. இச்சாசனத்தில் ஸ்ரீமற்சேன மஹாபோதி என்னும் பெயரும், "சா(க்)கியர்" என்னும் பெயரும் காணப்படுகின்றன. ஆகவே இவ்வூரில் கி.பி 1272 இல் பௌத்த வணிகர் இருந்த செய்தி அறியப்படுகிறது. திரு அகத்தீஸ்வரம் உடைய நாயனார் என்பது அகத்தி அல்லது அகஸ்தி என்னும் பௌத்த முனிவரைக் குறிக்கிறது போலும்.

    கூவம்: செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. இவ்வூருக்க்குத் திருவிற்கோலம் என்னும் பெயர் உண்டு. இவ்வூரில் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய புத்தச்சிலை, இப்போது சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் இன்றும் சில பௌத்த உருவச்சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தர்மச்சக்கரம். அதைப் படத்தில் காண்க.

    ஞாயர்: செங்கற்பட்டு ஜில்லா, புழற்கோட்டத்து ஞாயர் நாட்டு ஞாயர் என்று சாசனங்களில் இவ்வூர் கூறப்படும். இவ்வூரில் புத்தேரில் உடையார் கோயில் என்னும் பௌத்தக் கோயில் ஒன்று இருந்தது.

    நாவலூர்: செங்கற்பட்டு ஜில்லா, பொன்னேரி தல்லுக்காவில் உள்ள ஊர். (இப்போது திருவள்ளூர் மாவட்டம்) பௌத்தக் காஞ்சியில் (காஞ்சிபுரத்தில்) இருந்த கச்சிக்குநாயகர் கோயில் என்னும் புத்த கோயிலின் பள்ளிச்சந்தம் (மானியம்) ஆக இருந்தது இவ்வூர் என்று இங்குள்ள ஒரு சாசனம் கூறுகிறது. இச்சாசனத்தின் பின்புறத்தில் தர்ம சக்கரம் (பௌத்த சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. (S.I. Ep. Rep. 1934 – 35 Page 76, 13 of 1934 – 35)

    திருச்சோபுரம்: தென் ஆர்க்காடு ஜில்லா, கூடலூர் தாலுகாவில் உள்ள இவ்வூர் மங்களபுரீசுவரர் கோயில் முன்மண்டபத்து மேல்தளத்தில் உள்ள ஒரு கல் சாசனம் சிதையுண்டிருக்கிறது. இச்சாசனத்தில் சாரிபுத்திர பண்டிதர் என்பவர் தானம் செய்த செய்தி கூறப்படுகிறதோடு சங்கத்தார் குறிப்பிடுகின்றனர். சங்கம் பௌத்த பிக்குச் சங்கத்தைக் குறிக்கிறது. சாரிபுத்திர பண்டிதர் என்னும் பெயர் பௌத்தப் பெயர் ஆகும். ஆனால், இந்தச் சாரிபுத்திரரும், திருஞானசம்பந்தருடன் வாதம் செய்த சாரிபுத்தரும் வெவ்வேறு ஆட்கள். இந்தச் சாசனம், ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் I காலத்தில் கி.பி 1264-65 இல் எழுதப்பட்டது. (113 of1914 Ep 1904. P. 44)

    பல்லாவரம்: பல்லவபுரம் என்பதன் திரிபு இப்பெயர். காஞ்சிபுரத்துக்குத் தென்மேற்கே 3 மைலுக்கப்பால் இருக்கிறது. இவ்வூரில், காஞ்சிபுரத்தை அரசாண்ட பல்லவ அரசகுடும்பத்தார் வாழ்ந்திருந்தார்கள் ஆகையால், இவ்வூர் இப்பெயர் பெற்றது. இப்போது இது சிறு கிராமமாக இருக்கிறது. பல்லவர் காலத்தில் இவ்வூர் சிறப்புற்றிருக்க வேண்டும். இவ்வூரில், முதலாவது மகேந்திரவர்மன் கற்பாறையைக் குடைந்து அமைத்த குகைக்கோயில் ஒன்று இருக்கிறது. 15-7-46 இல் இவ்வூருக்குச் சென்றிருந்தபோது இவ்வூருக்கு அண்மையில் உள்ள கணிகிலுப்பை என்னும் ஊரில் புத்தர் உருவச்சிலையொன்றை ஏரிக்கரையில் கண்டேன். இவ்வுருவம், ஏரிக்கரைக்குக் கொண்டுவரப்படுவதற்கு முன்பு, அவ்வூர் விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்தது. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். பிறகு, புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல்லவ அரச குடும்பம் இருந்த இவ்வூரில் புத்தர் ஆலயம் இருந்தது வியப்பன்று. ஏனென்றால், பல்லவ குடும்பத்தில் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருந்தனர். புத்தவர்மன் என்னும் பெயரைச் சூடிய பல்லவ அரசர்கள் சாசனங்களில் குறிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள புத்த விக்கிரகமும், வர்மச்சக்கரக் கல்லும் இவ்வூரில் புத்த கோயில் இருந்ததை வலியுறுத்துகின்றன.

    மாங்காடு: செங்கல்பட்டு ஜில்லா, சைதாப்பேட்டை தாலுகா பூந்தமல்லிக்கு அருகில் இருக்கிறது இக்கிராமம். இவ்வூர் வெள்ளீசுவரர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனம் ஒன்று, திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சுந்தரபாண்டிய தேவர் I (1251-64) காலத்தில், அவரது 5 ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், இங்கிருந்த பள்ளிக்கு (புத்தர் கோயில்) மாங்காடு கிராமம், பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்டதென்று எழுதப்பட்டுள்ளது. (788, 358 0f 1908 Top. List Vol. 1.)

    இவ்வூரில் மூன்று மகாயான பௌத்த உருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று தலையுடைந்து கிடக்கிறது. அன்றியும், மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்னும் கிராமத்தில் ஒரு விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. இதற்கு அருகில் தர்மராஜா கோயிலும் இருக்கிறது. இங்கு ஆதியில், புத்தர் கோயிலை அழித்து விநாயகர் கோயிலையும் தர்மராஜா கோயிலையும் கட்டியிருக்க வேண்டும். புத்தர்கோயிலை, விநாயகர் கோயிலாகவும், தர்மராஜர் கோயிலாகவும் அமைப்பது பிற்காலத்து வழக்கம். பட்டுக்கிராமத்தில் இருந்த புத்தர் உருவச்சிலை இப்போது சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

    இரண்டாங்காடு: செங்கற்பட்டு ஜில்லா ஸ்ரீபெரும்புதூர் தாலுகா குன்றத்தூருக்கு அருகில் உள்ளது இரண்டாங்காடு. இங்கு புத்தர் உருவச்சிலையொன்று இருக்கிறது. இவ்வூருக்குப் புத்தவேடு என்று பெயர் கூறப்படுகிறது.


இனி, பாண்டி நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்:


    மதுரை: இந்த நகரத்தில் பௌத்தப் பள்ளிகள் இருந்தன வென்பதை மதுரைக் காஞ்சி என்னும் நூலினால் அறிகிறோம்.

"திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
யோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்
தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்
தாமு மவரு மோராங்கு விளங்கக்
காமா கவினிய பேரிளம் பெண்டிர்
பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளி"

    இதன் உரை: திண்ணிய ஒளியினையுடைய பேரணி கலசங்களையுடையவராய் விருப்பம் அழகு பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையுங் கூட்டிக்கொண்டு, தாது சேர்ந்த செவ்வித்தாமரைப் பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக் கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும் பூவினையுடையவராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பௌத்த பள்ளி. இவ்வுரை நச்சினார்க்கினியர் எழுதியது ஆகும்.

    அசோக சக்கரவர்த்தி மதுரைக்குக் கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில் இருந்ததென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்த பள்ளியொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்ததென்றும் கி.பி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் பிரயாணம் செய்த யுவாங் - சுவாங் என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். மதுரையில், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் 'சிந்தா தேவி' என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரியவருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளரிற் சிலர் கருதுகின்றார்கள்.

    அரிட்டாபட்டி: மதுரை ஜில்லாவில் இப்போது குக்கிராமமாயுள்ள ஓர் ஊர். கி. மு மூன்றாம் நாற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் ஆரசனுடைய அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷு, மகேந்திரருடன் சேர்ந்து பாண்டி நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச் செய்தாரென்றும் அந்த அரிட்டர் என்பவர் இந்த ஊருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார் என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக் கருகில் உள்ள பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்தது. பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது.

    பொதிகை: பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதிசத்தர் வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து 'மலைய நாடு' என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவராகிய வச்சிரபோதி (கி.பி 661-730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென் பௌத்த (Zen Buddism) மதத்தைப் பரப்பியவர் இவரே.

    தஞ்சை: பாண்டிநாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்த ஊரில் வாணன் என்னும் சிற்றரசன் ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு. பாலி மொழியில் பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷுவாகிய ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள் இருந்தனர்.

    திருமாலிருஞ்சோலை: 'அழகர்மலை' என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள பெரியாழ்வார் நந்தவனத்துக்கு எதிரில் உள்ள குளம் ஆராமத்துக் குளம் என்று பெயர் வழங்கப்படுகிறது. ஆராமம் என்பது சங்கராமாமம். அதாவது பௌத்த பிக்ஷுக்கள் வசிக்கும் இடம். அன்றியும், இக்கோயிலின் பழைய ஸ்தல விருக்ஷம் போதி (அரச) மரம் என்று கூறப்படுகிறது. இக்குறிப்புகள் யாவும் இது பண்டைக்காலத்தில் பௌத்தக் கோயிலாக இருந்ததென்பதைக் காட்டுகின்றன.

    தென்கரை: திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு புத்தர் உருவச்சிலை யொன்று இருக்கிறது. (P.I.M.A.R. 1916 – 17.)

ஆசாரிய தம்மபாலர், வச்சிரபோதி, தம்மகீர்த்தி முதலிய பௌத்தப் பெரியார்கள் பாண்டிய தேசத்தில் இருந்தவர் ஆவர். பாண்டியதேசம், பாலி மொழியில் தம்பராட்டா (தாம்பிரபரணி தேசம்) என்று கூறப்படுகிறது. பாண்டியநாட்டில், பாண்டவ மலைகளும் அவற்றில் பிராமி எழுத்துக்களும் அதிகமாகக்காணப்படுகின்றன. ஜைனமதத்திற்கு முன்பு, பௌத்தமதம் பாண்டியநாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள.


இனி, சேரநாட்டில் இருந்த பௌத்த ஊர்களை ஆராய்வோம்:

    வஞ்சிமாநகர்: இப்போது மலையாள தேசமாக மாறிவிட்ட கேரள தேசம் பண்டைக்காலத்தில் தமிழ் நாடாக இருந்தது. அப்போது அதற்குச் சேரநாடு என்று பெயர். அதன் தலைநகராக இருந்தது வஞ்சிமாநகர். கி. பி இரண்டாம் நாற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக் கதைத் தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருடையவன், இந்த நகரத்தில் சிறந்ததொரு புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலையினால் தெரிகின்றது. சிலப்பதிகாரக் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன் என்பதும், பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பௌத்த பிக்ஷுவின் உபதேசங்களைக் கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு, தன் பொருள் முழுதும் தானம் செய்தான் என்பதும் தெரிகின்றன. இவன் கி. மு முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனாகலின், இந்தச் சேதியம் கட்டப்பட்டதும் அக்காலமாகும். கி. பி இரண்டாம் நாற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல பௌத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும், கோவலன் தந்தை மாசாத்துவானும் மணிமேகலையும், அறவண அடிகளும் இந்த நகரத்திற்சென்று இங்கிருந்த பௌத்த விகாரைகளைத் தொழுதனரென்பதாகவும் மணிமெகலை கூறுகிறது.

    பாண்டவமலைகளும் கழுகுமலைகளும்: தமிழ்நாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகள் சிலவற்றை மேலே கூறினோம். பண்டைக்காலத்திலே தமிழ்நாடு முழுவதும் பௌத்த, ஜைன சமயங்கள் பரவியிருந்தன என்பதைச் சாசனங்களும் நூல்களும் சான்று பகர்கின்றன. கி.பி 7ஆம் நூற்றாண்டிலே, சைவசமயம் குன்றி பௌத்த மதமும், சமண சமயமும் பரவியிருந்ததென்றும், இதனைக் கண்டசிவபாத இருதயர் மனம் வருந்திச் சிவபெருமானிடம் முறையிட்டார் என்றும், பௌத்த சமண மதங்களை அழித்துச் சைவசமயத்தைப் பரவச் செய்வதற்காகத் திருஞான சம்பந்தர் பிறந்தார் என்றும் பெரியபுராணம் கூறுகிறது.

மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுந்தே
ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால்
பூதிசா தளவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்."
            (பெரிய புராணம் திருஞான சம்பந்தர் - 18)

    இவ்வாறு அக்காலத்திலே, தமிழ்நாடு முழுவதும், பௌத்தமும் சமணமும் பரவிப் பெருகியிருந்ததாகச் சேக்கிழார் கூறுவது வெற்றுரையன்று: உண்மையே. மூவர் தேவாரத்தையும் தேவாரம் பெற்ற திருப்பதிகளின் வரலாற்றையும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால், பௌத்தமும் சமணமும் ஒவ்வொரு ஊரிலும் பரவியிருந்த செய்தியை யறியலாம். இந்த முறையில், நான் ஆராய்ந்து பார்த்த வரையில், தேவாரம் பெற்ற திருப்பதிகளிலெல்லாம் மூவர் காலத்திலும், அதற்குப் பிற்பட்டகாலத்திலும் பௌத்த சமயமும் சமன சமயமும் சிறப்புற்றிருந்த செய்தியைக் கண்டேன். ஆராய்ச்சி மனப்பான்மையுடையோர், தேவாரம் பெற்ற திருப்பதிகளின் சமய வரலாற்றை இக்கண்கொண்டு ஆராய்ந்து உண்மை காண்பாராக.

    இனி, தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப்படுகிற பஞ்ச பாண்டவ மலை அல்லது பாண்டவக் குன்று என்பனவற்றில் பெரும்பாலானவை, பண்டைக்காலத்திலே பௌத்த பிக்குகள் வசித்துவந்த மலைகள் என்பதை விளக்குவாம். தமிழ்நாட்டில் மட்டுமன்று, ஆந்திரநாட்டிலும் இத்தகைய பாண்டவர் குன்றுகள் உள்ளன. ஆதியில், பௌத்த பிக்குகள் வசித்துவந்த இக் குகைகள், பௌத்தமதம் செல்வாக்கிழந்த பிறகு ஜைனர்களால் கைப்பற்றப்பட்டு, இவைகளில் சமணத்துறவிகள் வசித்து வந்தார்கள். பிற்காலத்திலே, சமணசமயமும் வீழ்ச்சியடைந்த பிறகு இக்குகைகள் 'இந்து' சமயத்தவரால் கைப்பற்றப்பட்டு இந்துக்கோயில்களாக மாற்றப்பட்டன. இந்துக்கள் இக் குகைகளைக் கைப்பற்றிய பிறகு, இக்குகைகளில் பாரதக் கதையில் கூறப்படுகிற பஞ்சபாண்டவர் வனவாசம் செய்த காலத்தில் தங்கி வசித்தாகக் கதைகள் கற்பிக்கப்பட்டு, இன்றளவும் பாமரர்களால் நம்பப்பட்டு வருகின்றன. பண்டவமலை அல்லது பண்டவ குன்று என்பது பழைய பெயர். பிற்காலத்தில், இப் பெயருடன் பஞ்சம் என்னும் அடைமொழி சேர்த்துப் பஞ்சபாண்டவமலை என்று வழங்கப்படுகின்றன. உண்மையில் பஞ்ச பாண்டவர் களுக்கும் இக்குகைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பௌத்த பிக்குகள் வசித்துத் தவம் செய்த குகைகளாகும் இவை. பௌத்தர்கள் ஏன் இக் குகைகளுக்குப் பண்டவமலை என்று பெயரிட்டார்கள் என்பதன் காரணத்தைக் கூறுவாம்.

    பிற்காலத்திலே, புத்தர் பெருமானாகத் திகழ்ந்த சித்தார்த்த குமரன், அரசையும், அரசபோகத்தையும் துறந்து துறவுபூண்ட உடனே, மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருகம் என்னும் நகரத்திற்கு வந்து, நகரத்தில் பிச்சை ஏற்றார். அக்காலத்தில் அந்நாட்டையாண்ட அரசன் பிம்பிசாரன் என்பவன். அவ்வரசனிடம் ஒற்றர்கள் சென்று, கண்ணைக் கவரும் உருவமைந்த ஒரு பிக்கு நகரத்தில் பிச்சை ஏற்பதை அறிவித்தார்கள். அரசன் அவர்களை அனுப்பி அவர் எங்கே செல்கிறார்; என்ன செய்கிறார் என்பதைக் கண்டறியும்படி ஏவினான். பிச்சை ஏற்ற சித்தார்த்தர், அந்நகரத்தைச் சுற்றிலுமிருந்த ஐந்து மலைகளில் ஒன்றாகிய பண்டவமலை அல்லது பண்டவப் பதம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சென்று தாம் பிச்சை ஏற்ற உணவை உட்கொள்ளத் தொடங்கினார். அரண்மனையிலே இனிய உணவுகளை உண்டு பழகிய அவருக்கு, பிச்சையால் கிடைத்த உணவை உண்பதற்கு மனம் இடந்தரவில்லை. வாய் குமட்டியது. ஆனாலும், தாம் துறவு பூண்டபடியால் இத்தகைய உணவைத்தான் உண்ணவேண்டும் என்று உறுதிகொண்டு, மனம் பொறுத்துக்கொண்டு அதனை உண்டார். இவற்றையெல்லாம் ஒற்றரால் அறிந்த பிம்பிசார அரசன் அவர் இன்னார் என்பதையறிந்து அவரை யழைத்துத் தமது அரசாட்சியில் ஒரு பகுதியை அவருக்குக் கொடுப்பதாகவும், துறவறத்தை விட்டு விடும்படியும் கூறினான். அதற்குச் சித்தார்த்தர் இணங்காமல் காட்டிற்குச் சென்றுவிட்டார்.

    இந்தச் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டவை தான் நமது நாட்டில் உள்ள பண்டவமலைகள். சித்தார்த்தராகிய புத்தர் பெருமான், தமது துறவற வாழ்க்கையில் முதல் முதல் தங்கிய மலை பண்டவமலை (பண்டு - வெண்மை). ஆகவே, அவரைப் பின்பற்றி வந்த பௌத்த பிக்குகள் தாம் வசித்த மலைகளுக்கும் மலைக்குன்றுகளுக்கும் பண்டவமலை அல்லது பண்டவகுன்று என்று பெயர் சூட்டியதில் வியப்பொன்றுமில்லை. என்னை? அந்தந்தச் சமயத்தவர் தத்தம் சமயச் சார்பான பெயர்களைத் தத்தம் இடங்களுக்குச் சூட்டுவது வழக்கமாதலால் என்க. பௌத்த பிக்குகள், புத்தர் பெருமானுடைய மரபைப் பினபற்றிவருவது இன்றும் காணலாம். உதாரணமாக, பௌத்தர் துறவு பூண்பதற்கு முன்னாள், தம்தம் அரசகுமாரனைப் போன்று போக போக்கியமான உடைகளை அணிந்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதன் காரணம் யாதெனின், சித்தார்த்த குமாரன் துறவுபூண்பதற்கு முன்நாள், இந்திரன் ஏவலால் விசுவகர்மன் வந்து அவருக்கு ஆடை அணிகளை அழகாக உடுத்தி அலங்காரம் செய்து சென்றான் என்பது புத்தர் வரலாறு. அம்முறைப்படி இக்காலத்துப் பௌத்தர்களும், துறவு பூண்பதற்கு முன்நாள் தம்மை அரச குமாரனைப் போன்று அலங்காரம் செய்து கொள்கிறார்கள். எனவே, பண்டவமலை என்பது சித்தார்த்தர் துறவுபூண்டு முதல் முதல் தங்கி வசித்த மலை என்பதும், அதனை நினைவுகூர்தற்பொருட்டுப் பௌத்த பிக்குகள் தாம் வசித்த குன்றுகளுக்குப் பண்டவமலை என்று பெயரிட்டனர் என்பதும் கருதத்தக்கது. பிறகாலத்திலெ, பௌத்த மதம் மறைந்தபின்னர் பண்டவமலை என்பது பாண்டவமலை என்றாகி, பிறகு பஞ்சபாண்டவ மலையாகிவிட்டது. நமது நாட்டில் உள்ள பாண்டவ மலைகளில் சிலவற்றைக் கூறுவாம்.

    அழகர் மலை: மதுரை ஜில்லா மேலூர் தாலுகாவில் உள்ளது. அதாவது மதுரைக்கு வடமேற்கே 12 மைலில் உள்ள அழகர் மலைத்தொடர். இங்கு, கிடாரிபட்டி அழகர்மலை என்னும் இடங்களுக்கு இடையிலே, லோகல் போர்டு ரோடுக்கு வடக்கே 2 பர்லாங்கு தூரத்தில், பஞ்ச பாண்டவ படுக்கை என்னும் குகையுண்டு. இது 50 கெஜம் அகலமும் 150 கெஜம் நீளமும் உடையது. தெற்குப் பார்த்த இக்குகை, கிழக்கு மேற்காக நீண்டிருக்கிறது. இக்குகையிலே, கற்பாறையில் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. அசோக சக்கரவர்த்தி காலத்துப் பிராமி எழுத்துக்கள் இங்கு பாறையில் செதுக்கப்பட்டுள்ளன இவ்வெழுத்துக்கள் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. அழகர்கோயிலில் ஆராமத்துக்கரை, ஆராமத்துக்குளம் என்னும் பெயர்கள், ஆதியில் அங்குப் பௌத்தர்கள் இருந்தனர் என்பதைக் குறிக்கின்றன.

    கொங்கர் புளியங்குளம்: மதுரை ஜில்லா, திருமங்கலம் தாலுகாவில் உள்ள இவ்வூர்க் குன்றில் ஒரு குகையுள்ளது. அதாவது மதுரைக்குத் தென்மேற்கு 9 மைலில் உள்ளது. இதற்குப் பஞ்சபாண்டவர் குகை என்று பெயர் வழங்குகிறது. இக்குகைகளில் பிக்ஷுக்கள் படுத்துறங்குவதற்குக் கற்பாறையில் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கி.மு 2 அல்லது 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்களும் இதில் காணப்படுகின்றன.

    கீழைவளவு: மதுரை ஜில்லா மேலூர் தாலுகா மேலூரில் இருந்து 6 மைலுக்குப்பால் உள்ளது. இங்குள்ள பஞ்சபாண்டவக் குன்றில் அசோக அரசர் காலத்துப் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. (55 – 57 of 1910 Ep. Rep 1910. Page 76 Top Vol. II P.1038)

    முத்துப்பட்டி: மதுரை ஜில்லா மதுரை தாலுகா வடபழங்கியைச் சேர்ந்த கிராமம். இங்குள்ள மலையில் பஞ்சபாண்டவர் படுக்கைகள் சுமர் 30 உள்ளன. பிராமி எழுத்துக்களும் சிதைந்து காணப்படுகின்றன. (Ep. Rep 1910. Page 76-135 of 1903-4. Ep.Rep. 1910)

    நாகமலை: மதுரை ஜில்லாவில் விக்கிரமமங்கலம் என்னும் ஊரில் உள்ளது. இங்கும் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. (Ep. 1926-27. 4. Ep.Rp. 1908 P.52 and 59, 45 of 1908)

    திருப்பரங்குன்றம்: மதுரை ஜில்லா திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்கும் காலடி என்னும் கிராமத்துக்கும் இடையில் உள்ள பேர்போன சுப்பிரமணியர் மலை. இக்குன்றின் மேற்குப் பக்கத்தில், செங்குத்தான பாறையில் குகையும் அதற்குள் ஆறு கற்படுக்கைகளும் உள்ளன. இக்குகைக்கு ஏறிச்செல்வது கடினம். இக்குகையில் பல ஆட்கள் தங்க இடம் உண்டு. கி.மு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துச் சாசனம் உண்டு. (383 of 1908)

    இம்மைலையுச்சியில் உள்ள சிக்கந்தர் தர்க்காவுக்கு மேற்கே நூறு கெஜத்துக்கப்பால் இன்னொரு சிறு குகையுண்டு. இக்குகையிலும் கிழக்கு மேற்காகக் குறுகிய 5 படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. (Ep.Rep.1909 P.68,69)

    இங்குள்ள குகையொன்றில், 999 பேருடன் நக்கீரரை ஒரு பூதம் சிறைபிடித்து வைத்திருந்ததாகக் கதை வழங்குகிறது.

    சித்தர்மலை: மதுரை ஜில்லா மேட்டுப்பட்டியில் உள்ளது. வைகையாற்றுக்கு அருகில் உள்ள அழகான இடம். மலைமேல் இப்போது ஒரு சிவன் கோயில் உண்டு. இக்கோயிலிலிருந்து தெற்குப் பக்கமாகக் கீழே இறங்கும் பாதை வழியாகச் சென்றால் மலையின் மத்தியில் ஒரு குகை காணப்படுகிறது. இக்குகையின் முன்புறம் இப்போது சுவர் வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது. சிறு வழியே உள்புகுந்து சென்றால், குகைக்குள் 5 கற்படுக்கைகளைக் காணலாம். பிராமி எழுத்துச் சாசனங்களும் உள்ளன. (Ep.Rp.1908 P52 and 59, 45 of 1908)

    விருச்சியூர்: மதுரை ஜில்லா விளக்கத்தூருக்குக் கிழக்கே ஒரு மைல் தூரத்தில் உள்ளது. இவ்வூர்க் குன்றுகள் ஒன்றில் இரண்டு குகைகள் உள்ளன. மற்றொரு நீண்டபாறையில் இயற்கையாயமைந்த குகையொன்றுண்டு. இங்குக் கற்படுக்கைகள் பல அமைக்கப் பட்டுள்ளன. பாறையில் 30 அடி உயரத்தில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. (38 of 1907. Ep. Rep. 1908 p. 58)

    குன்னக்குடி: மதுரை ஜில்லா திருப்பத்தூர் தாலுகா. இங்குள்ள குன்றின்மேல் சுப்பிரமணியர் கோயிலும், மேற்குப் பக்கத்தில் பஞ்சபாண்டவர் குகையும் உள்ளன. குகையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துகளும் உள்ளன. (44 of 1909 P.70.Ep.Rep.1910 P.80)

    ஆனைமலை: மதுரை ஜில்லா. இம்மலைமேல் பஞ்சபாண்டவர் குகையும் கற்படுக்கைகளும் உள்ளன. பிராமி எழுத்துகளும் எழுதப்பட்டுள்ளன. (Ep. Rep.1907. P.60 and 61)

    கி.பி 7 ஆம் நூற்றாண்டிலே திருஞானசம்பந்தர் காலத்தில் இம்மலையில் சமணர் இருந்தார்கள் என்று தேவாரத்தினால் அறிகிறோம்.

    வீரசிகாமணி: திருநெல்வேலி ஜில்லா சங்கரநயினார் கோயிலுக்கு 8 மைலுக்கப்பால் உள்ளது. இவ்வூர்ப் பாறையில் பஞ்சபாண்டவர் குகையுண்டு. கற்படுக்கைகள் உள்ளன. (Ep. Rep. 1908 P. 91)

    மருகால்தலை: திருநெல்வேலி ஜில்லா பாளையங்கோட்டைக்கு 10 மைல் தூரத்தில் உள்ளது. இவ்வூரில் உள்ள பூவில் உடையார் மலையில் உள்ள குகையில் கற்படுக்கைகளும் அசோகர் காலத்துப் பிராமி எழுத்துக்களும் செதுக்கப்பட்டுள்ளன. (Ep. Rep. 1909 P. 60)

    ஆறுநாட்டார் மலை: திருச்சி ஜில்லா கரூர் தாலுகா கரூருக்குச் சில மைல் தூரத்தில் உள்ள பூகழூரில் இருக்கிறது. அம்மலைமேல் சுப்பிரமணியர் கோயில் இருக்கிறது. இங்கு இயற்கையாமைந்த குகையில் கற்படுக்கைகளும் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்களும் உள்ளன. (Ep. Rep. 1927 P. 50)

    திருச்சிராப்பள்ளி: இம்மலைமேல் பேர்பெற்ற தாயுமானவர் கோயிலும் உச்சிப்பிள்ளையார் கோயிலும் சில குகைகளும் உள்ளன. இக்குகைகளுள் ஒன்றில் கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல பாண்டவ மலைகளைக் கூறலாம். விரிவஞ்சி விடுகின்றோம். தமிழ்நாட்டில் மட்டுமன்று; ஆந்திரநாட்டிலும் பாண்டவ மலைகள் சில உள்ளன. அவற்றில் ஒன்று ராஜமந்திரிக்கு 25 மைல் வடக்கில் உள்ள ரம்ப எர்ரபாலம் என்னும் கிராமத்தில் உள்ள குன்றுகளில் பாண்டவுல மெத்த என்னும் பெயரோடு ஒரு குன்று உள்ளது. இதற்கடுத்து குன்றுகளிற் பௌத்த விகாரைகளும், பள்ளிகளும் இடிந்து அழிந்து காணப்படுகின்றன. எனவே, இப்போது பஞ்சபாண்டவ மலை என்று வழங்கும் மலைகளில் பண்டைக் காலத்தில் பௌத்த பிக்குகள் வசித்து வந்தனர் என்பதும் ,அவற்றின் பழைய பெயர் பண்டவமலை என்பதும், பாரதக் கதையின் பஞ்சபாண்டவருக்கும் இம்மலைகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் விளங்குகிறது.

    இதுபோலவே, கழுகுமலை அல்லது கழுகுகுன்றம் என்னும் பெயருள்ள மலைகளும் ஆதியில் பௌத்த பிக்குக்கள் தங்கியிருந்த இடங்களாகும். புத்தபகவான் தங்கியிருந்த ஒரு மலையின் பெயர் கிஜ்ஜகூடம் என்பது. இதுவும் மகதநாட்டின் தலைநகரமான ராஜகிருத நகரத்தைச் சூழ்ந்திருந்த ஐந்து மலைகளில் ஒன்று. இந்த கிஜ்ஜகூடமலையில் கழுகுகள் வசித்துவந்தன. ஆகவே, கிஜ்ஜகூடம் அதாவது கழுகுமலை என்று இம்மலைக்குப் பெயர் வந்தது. பண்டவமலையில் புத்தர் தங்கியது போலவே கிஜ்ஜகூட மலையிலும் அவர் அடிக்கடி சென்று தங்கியிருந்தார். இம்மலைக்குகையில் தங்கியிருந்தபோது புத்தரை மாரன் என்னும் தேவன் அச்சுருத்தினான்; புத்தர் அஞ்சாமல் வீற்றிருந்தார். மாரன் வெட்கி ஓடினான். புத்தர் இந்த மலையடி வாரத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது, அவரைக் கொல்லுவதற்காகத் தேவதத்தன் என்பவன் இம்மலையுச்சியிலிருந்து பெரும்பாறையை யுருட்டி வீழ்த்தினான். அப்பாறை இவர்மேல் படவில்லை. ஆனால், சிறு கல் சிதறி வந்து இவரைக் காயப்படுத்தியது. அன்றியும், இந்தக் கிஜ்ஜகூட மலையில் இருந்தபோது தான், ஜீவகன் என்னும் மருத்துவன் புத்தருக்குப் பேதி மருந்து கொடுத்து அவரது உடல் நலத்தைக் காத்தான். புத்தர் இந்த மலையில் இருந்தபோதுதான் சம்பாதி என்னும் பிரமனும், சக்கன் எனப்படும் இந்திரனும், அவன் பாணனாகிய பஞ்சசிகாவும், இந்தன் என்னும் இயக்கனும், சாதூர்மகா ராஜிகர்களும் புத்தரிடம் வந்து அவரை வணங்கிச் சென்றார்கள்.

    இந்த கிஜ்ஜகூட மலையில் புத்தர் இருந்தபோது தான் மாகன் என்பவன் பொருட்டு மாக சூத்திரத்தையும், அபய இராஜகுமாரன் பொருட்டு அபய சூத்திரம் எனப்படும் கிஜ்ஜகூட சூத்திரத்தையும், தம்மிகன் பொருட்டுத் தம்மிக சூத்திரத்தையும் அருளிச்செய்தார். புத்தருடைய முக்கிய சீடர்களாகிய சாரிபுத்தர், ஆநந்தர், மகாகஸ்ஸபர், அநுருத்தர், புன்ன, உபாலி, சந்த, சன்ன, மொக்கல்லானர் முதல்லானவர்களும் இந்தக் கிஜ்ஜிகூடம் என்னும் கழுகுமலையில் சிலகாலம் வசித்து வந்தார்கள். ஆகவே, இவ்வளவு சிறப்புடையதான கழுகுமலையின் பெயரைப் பௌத்தப் பிக்குகள் தாம் வசித்த மலைகளுக்குச் சூட்டி வழங்கியது வியப்பு அன்று.

    செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள திருக்கழுக்குன்றம் என்னும் மலை ஆதிகாலத்தில் பௌத்தப் பிக்குகள் வசித்த இடம் என்று தோன்றுகிறது. மதுரை ஜில்லா மதுரை தாலுகாவில் மாங்குளம் என்னும் கிராமத்தில் கழுகுமலை என்னும் குன்றுகள் உள்ளன. இக்குன்றுகளில் நான்கு குகைகள் உள்ளன. குகைகளில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கழுகுமலை உண்டு.

    கிஜ்ஜகூடம் என்னும் கழுகுமலைகள் ஆந்திரநாட்டிலும் உள்ளன. அவை முற்காலத்தில் பௌத்தர்களின் இடமாக இருந்தன என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்களில் பௌத்தச் சார்பான சான்றுகள் காணப்படுகின்றன. ஆராய்ச்சி மனப்பான்மை யுடையோர் அவைகளை ஆராய்ந்து காண்பார்களாக.

    தமிழ்நாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகள் இவைமட்டும் என்று கருத வேண்டா. இன்னும் பல பௌத்த ஊர்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்தெழுத நேரம் இன்மையால் அவற்றை இங்கு கூறவில்லை. இதில் ஆசையுள்ளவர் ஆராய்ந்து காண்பாராக.

    இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே 'சாத்தன் காவு' என்றும், 'ஐயப்பன் கோயில்' என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். 'சாத்தன்' என்பதும் 'சாஸ்தா' என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். எனவே, 'சாத்தன் காவு' என்றால், புத்தரது தோட்டம் என்பது பொருள். பண்டைகாலத்தில் பூந்தோட்டங்களுக்கிடையே புத்தக் கோயில்கள் அமைப்பது வழக்கம். பௌத்தப் பள்ளியுள்ள பூந்தோட்டத்தைப் பௌத்தர் 'ஆராமம்' என்பர். 'ஆராமம்' என்றால், தோட்டம் அல்லது கா என்பதே (தொடர்புரை 2 காண்க).

    இவையன்றியும், தமிழ்நாட்டிலே மானாவூர், துடிதபுரம் என்னும் ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இந்த ஊர்கள் எங்கிருந்தன என்பது விளங்கவில்லை. தக்கயாகப்பரணி உரையில் பௌத்தபுரம் என்னும் ஊர் கூறப்படுகின்றது. இதுவும் எந்த இடத்தில் இருந்ததென்று தெரியவில்லை.

    திருச்சாணத்துமலை: திருவாங்கூர் நாட்டில் உள்ளது. இங்கு இப்போதுள்ள பகவதிகோயில், முற்காலத்தில் ஜைனக் கோயிலாகவும், அதற்கு முன்பு பௌத்தக் கோயிலாகவும் இருந்தது.

    ஸ்ரீமூலவாசம்: திருவாங்கூர் நாட்டில் அம்பலப்புழ தாலுக்காவில் திருக்கண்ணபுழ சாஸ்தா கோவிலுக்கு தென்மேற்கில் கடற்கரையோரத்தில் இருந்தது. இது அக்காலத்தில் பேர்பெற்ற பௌத்த திருப்பதி. இங்கு மூல சோமவிகாரை என்னும் பேர்பெற்ற பௌத்தப் பள்ளி இருந்ததாக மூக்ஷிகவம்சம் என்னும் நூலும் கல்வெட்டுச் சாசனமும் கூறுகின்றன. ஸ்ரீமூலவாசம், பிற்காலத்தில் கடலினால் அழிந்துபோயிற்று.

    ஆய்வேள் குலத்தில் பிறந்த விக்கிரமாதித்திய வரகுணன் என்னும் அரசன் கி.பி 868 இல் இந்தக் கோயிலுக்குத் தானம் வழங்கிய செய்தி அவனுடைய சாசனத்தினால் தெரிகிறது. "மற்றும் கோயிற்குரியதெல்லாம் அகப்பட திருமூலவாசத்து படாரர்க்கு அட்டிக்குடுத்தது" என்று அந்தச் சாசனம் கூறுகிறது.

    மூல சோமவிகாரையில் இருந்து காந்தார தேசத்துக்குக் கொண்டு போகப்பட்ட லோகநாதர் (அவலோகிதர்) உருவச் சிலையின் பீடத்தில் "தக்ஷிணாபதே மூலவாச லோகநாத" என்று எழுதப்பட்டிருக்கிறது. மூலசோம விகாரையிலிருந்த வச்சிரநந்தி என்னும் பௌத்தபிக்கு தன்னுடைய சீடர்களுடன் சீன நாட்டுக்குச் சென்று பௌத்த மதத்தைப் பிரசாரம் செய்தார் என்று சொல்லுகிறார்கள்.

    திருவாங்கூரின் மத்தியபாகத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் உள்ளன. குன்னத்தூர் தாலுக்காவில் உள்ள பள்ளிக்கல் என்னும் ஊரில் ஒரு புத்த உருவச்சிலை இருந்தது. அது தலையுடைந்து கிடக்கிறது. இப்போது இது திருவாங்கூர் காட்சிச் சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

    அம்பலப்புழ தாலுக்காவில் கருமாடித்தோடு என்னும் ஆற்றங்கரைமேல் ஒரு புத்தர் சிலை உண்டு. இதன் இடக்கை இப்போது ஒடிந்துவிட்டது. இந்தப் புத்தர் சிலையை அவ்வூரார் கருமாட்டிக்குட்டன் என்று கூறுகிறார்கள். இதனைப் பூசை செய்தால் குழந்தைகளுக்கும் கன்றுகாலிகளுக்கும் உண்டாகிற நோய் நீங்கும் என்று கூறுகிறார்கள்.

    மாவேலிக்கர என்னும் இடத்திலும் ஓர் அழகிய புத்த உருவம் யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறது.

    பரணிக்காவு என்னும் இடத்திலும் ஒரு புத்த விக்கிரம் உண்டு. மருதூர் குளக்கரையில் இருந்த புத்தர் உருவச்சிலை இப்போது கருநாகப்பள்ளி தாலுக்கா அலுவலகத்துக்கு முன்புள்ள சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது.